'60 படங்களில் பழைய சம்பளத்தில்தான் வேலை செய்கிறோம்...' - ஃபெப்சி தொழிலாளர்கள்

By Shankar

சென்னை: சம்பளப் பிரச்சினையில் தொழிலாளர் - தயாரிப்பாளர் தரப்பில் எந்த உடன்பாடும் இன்னும் எட்டப்படாததால் பெரும் தவிப்புடன் உள்ளது திரையுலகம்.

இதற்கிடையே, பழைய சம்பளத்தில்தான் நாங்கள் 60க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றுகிறோம். எனவே படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என ஃபெப்சி தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில், மொத்தம் 24 பிரிவுகள் உள்ளன. சுமார் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

அடுத்த மூன்று வருடங்களுக்கான சம்பள உயர்வு பற்றிய பேச்சுவார்த்தை கடந்த 2 மாதங்களாக நடைபெறுகிறது. பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடைவதற்குள் தயாரிப்பாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் படப்பிடிப்புகளில், தொழிலாளர்கள் சிலர் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

புதிய படங்கள் நிறுத்தம்

இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளை சேர்ந்த பட அதிபர்களின் கூட்டுக்கூட்டம், சென்னையில் உள்ள பிலிம்சேம்பரில் நடந்தது. அதில், 7-ந் தேதி (நேற்று) முதல் புதிய படங்களை தொடங்குவதில்லை என்றும், வருகிற அக்டோபர் 31-ந் தேதிக்குள் படப்பிடிப்புகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

தயாரிப்பாளர்களின் இந்த திடீர் முடிவு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பழைய சம்பளத்திலேயே....

இதுபற்றி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் ஜி.சிவா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறுகையில், "நாங்கள் இன்னும் பழைய சம்பளத்திலேயே வேலை செய்கிறோம். 60 சினிமா படப்பிடிப்புகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடைபெறுகின்றன. தொழிலாளர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து பணி புரிந்து வருகிறார்கள்,'' என்றார்.

மீண்டும் மாயவரம் ஷூட்டிங் ரத்து

இதற்கிடையில், தொழிலாளர்கள் அதிக சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்ட 'மாயவரம்' படக்குழுவினர், பிரச்சினை காரணமாக மீண்டும் படப்பிடிப்பை நிறுத்தியிருப்பதாக கூறினார்கள்.

இது பற்றி அந்த படத்தின் கதாநாயகன் டைரக்டர் ஸெல்வன் கூறுகையில், "ஏற்கனவே மாயவரத்தில் படப்பிடிப்பு ரத்து ஆனதால், நாங்கள் அனைவரும் சென்னை திரும்பி விட்டோம். சென்னையில் நேற்று ஒரு பாடல் காட்சியை படமாக்க முடிவு செய்தோம். டான்ஸ் மாஸ்டர் தினா மேற்பார்வையில், அந்த பாடல் காட்சி படமாக இருந்தது. நடனக் கலைஞர்கள் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதனால், சண்டை காட்சியை படமாக்க திட்டமிட்டோம். நடனக் கலைஞர்களைப் போலவே சண்டை கலைஞர்களும் பழைய சம்பளத்தில் வேலை செய்ய மறுத்து, அதிக சம்பளம் கேட்டார்கள். இதனால் சண்டை காட்சியையும் படமாக்க முடியவில்லை. அடுத்து என்ன செய்வது? என்று யோசித்து வருகிறோம்,'' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X