சிவகார்த்திகேயன், ஞானவேல்ராஜா பிரச்சனை பற்றி தெரியாது… வருமான வரித்துறை பதில் மனு !
சென்னை : தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் இருந்து தங்களை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
கே.இ. ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் சார்பாக தயாரித்த மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா, ராதிகா, சதிஷ், ரோபா ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

சம்பள பாக்கி
மிஸ்டர் லோக்கல் படத்தில் நடிக்க தனக்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும், ஆனால் ஞானவேல் ராஜா தனக்கு ரூ.11 கோடி மட்டுமே சம்பளம் தந்ததாகவும் ரூ 4 கோடி சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தனக்கு அளித்த ரூ.11 கோடி சம்பளத்துக்கு வருமான வரி பிடித்தம் செய்து அளித்ததாகவும் ஆனால் அதனை வரிமானவரித்துறையிடம் ஞானவேல் ராஜா செலுத்தவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

ரூ. 20 கோடி நஷ்டம்
இந்த வழக்கு தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தால் தனக்கு ரூ. 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும் அந்த படத்தின் கதையே தனக்கு பிடிக்கவில்லை என்றும் சிவகார்த்திகேயனின் கட்டாயத்தின் பேரிலேயே அந்த படத்தை தயாரித்ததாகவும் கூறியுள்ளார்.

ஏன் வழக்கு தொடரவில்லை
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர், மூன்று ஆண்டுகளாக சம்பளப் பாக்கியை கேட்டு ஏன் வழக்கு தொடரவில்லை. தற்பொழுது டிடிஎஸ் தொகையை வசூலிக்கும் வருமான வரித்துறையின் நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தொடுத்திருக்கும் நிலையில் மற்றொரு வழக்காக ஏன் இதை தொடர்ந்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பு பதிலளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

எதுவும் தெரியது
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிவகார்த்திகேயன் வழக்கில் எதிர்மனுதாரரான வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரி தாமோதரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிவகார்த்திகேயன் மற்றும் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சினைகள் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது.

எந்த தொடர்பும் இல்லை
அவர்கள் இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைக்கும், வருமான வரித்துறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் இருந்து வருமான வரித்துறையை நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











