‘காதல் காட்சியில் வாத்தியாரு நடித்தால் அது கொச்சையா’... மீண்டும் கஸ்தூரி பரபரப்பு பேச்சு!
கற்பு என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவானது என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: இரண்டு கணவன்கள் வைத்துக்கொள்ளும் சுதந்திரம் எல்லாம் பெண்களுக்கு தேவையில்லை என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியரான ஆரோக்கியசாமி க்ளெமன்ட் என்பவர் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் முடிவில்லா புன்னகை. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் நடிகை கஸ்தூரி, இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இரண்டு மனைவி:
விழாவில் பேசிய இயக்குனர் வேலு பிரபாகரன், "இங்கு ஒரு ஆண் இரண்டு பெண்களை மணந்துகொள்ள முடிகிறது. அவன் தைரியமாக இரண்டு வீட்டிலும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தங்குகிறான். ஆனால் ஒரு பெண்ணால் அப்படி நடந்துகொள்ள முடியுமா?. அப்படி அவள் செய்தால், இந்த உலகம் எப்படி எல்லாம் பேசும்" எனக் கூறி ஆதங்கப்பட்டார்.

தவறான கருத்து:
அவரை தொடர்ந்து பேசிய நடிகை கஸ்தூரி, இரண்டு கணவன்கள் வைத்துக்கொள்ளும் சுதந்திரம் எல்லாம் பெண்களுக்கு தேவையில்லை என்றார். இதுகுறித்து அவர் பேசியதாவது, "சினிமா தான் சமூகத்தை கெடுக்கிறது என பலர் கூறுகின்றனர். ஆனால் உண்மையில் சமூகத்தில் நடக்கும் வக்கிரமான விஷயங்களை அப்படியே சினிமாவாக எடுக்க இங்கு யாருக்கும் துணிவில்லை. பொள்ளாச்சி சம்பவத்தையோ, அயனாவரம் சிறுமி பாலியல் கொடுமையையோ இங்கு சினிமாவாக எடுக்க முடியுமா.

ஏற்றுக் கொள்ள முடியாது:
பாரதிராஜா ஆரம்பித்து வைத்த வித்து, இன்று ஷங்கர் வரை வந்துள்ளது. எமி ஜாக்சனை பாவாடை தாவணியில் காண்பித்து, அழகான தமிழ் பெண்ணாக காட்டி பாசாங்கு செய்கிறார். இது தான் எனது வருத்தம். மற்றபடி சினிமாவில் கவர்ச்சி நடனம் ஆடுவது ஒன்றும் தவறில்லை. அதை பார்த்து உணர்ச்சி உந்துதலில் சமூகம் கெட்டுப்போய்விடுகிறது, அதை பார்த்து தான் பலாத்காரம் என சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஊடகங்களின் கடமை:
மக்கள் செய்யும் குற்றங்களுக்கு சினிமாவை குற்றம் சொல்லுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். காதல் காட்சியில் வாத்தியாரு நடித்தால் அது கொச்சையா. அப்படி கொச்சையா இருந்தா அவர் நடித்திருப்பாரா, இல்லை இத்தனை பேர் ரசித்திருப்பார்களா?. இந்த பாசாங்கை ஒழிக்க வேண்டிய கடமை ஊடகங்களுக்கு தான் இருக்கிறது.

மரியாதை தேவை:
வேலு பிரபாகரன் சொன்னது போல் எங்களுக்கு இரண்டு கணவர்கள் எல்லாம் வேண்டாம். ஒன்றை வைத்துக்கொண்டே விழிப்பிதுங்குகிறது. கற்பு என்பது இங்கு பொதுவானதாக இருக்க வேண்டும். இதில் ஆண், பெண் வேறுபாடு கூடாது. எங்களுக்கு சுதந்திரம் எல்லாம் வேண்டாம். பெண்களுக்கு குறைந்தபட்ச மரியாதை தந்தால் போதுமானது", என நடிகை கஸ்தூரி கூறினார்.


Click it and Unblock the Notifications











