படம் தயாரிப்பதை நிறுத்திட்டோம்.. ஆனா நிஜ வாழ்க்கையில..பெண் போலீஸ் விவகாரத்தில் நடிகை டாப்ஸி நச்!
சென்னை: அமைச்சர் மகனை கைது செய்தது தொடர்பாக, டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பெண் போலீஸுக்கு ஆதரவாக நடிகை டாப்ஸி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அமைச்சர் மகன்
தொற்று பரவாமல் தடுக்க லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில், குஜராத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானியின் மகன் பிரகாஷ், கடந்த சில நாட்களுக்கு முன், லாக்டவுன் விதிகளை மீறி, சூரத் நகரில் சுற்றி வந்துள்ளார்.

பெண் போலீஸ் மடக்கினார்
அவர் நண்பர்களும் காரில் இருந்துள்ளனர். அடிக்கடி கார் சுற்றி வருவதைக் கண்ட பெண் போலீஸ் சுனிதா யாதவ் என்பவர், அந்த காரை மடக்கி, விசாரித்தார். ஆத்திரமடைந்த பிரகாஷ், நான் அமைச்சர் மகன் என்றும் காரை விட்டுவிடுமாறும் கூறினார். சுனிதா, நீங்க யாரா வேணா இருங்க, லாக்டவுன் நேரத்தில் இப்படி தேவையில்லாமல் ஊர் சுற்றுவது குற்றம் என்று தெரியாதா? என்று கேட்டார்.

வாக்குவாதம்
இதனால் கடுப்பான பிரகாஷ், பெண் போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் மிரட்டத் தொடங்கினார். ஆனால் சுனிதா அசரவில்லை. இந்தச் சம்பவம் பரபரப்பானது. இதையடுத்து பிரகாஷூம், அவரது நண்பர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையே, சுனிதா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

நடிகை டாப்ஸி
சுனிதாவை டிரான்ஸ்பர் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளங்களிலும் இதுபற்றி விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் இதுபற்றிய செய்தியை டேக் செய்துள்ள நடிகை டாப்ஸி, 'கொரோனாவால் நாங்கள் சினிமா தயாரிப்பதை நிறுத்தி விட்டோம். அதற்குப் பதிலாக நிஜ வாழ்க்கையில் சில சம்பவங்கள் நடந்து வருகின்றன' என்று தெரிவித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மித்தாலி ராஜ் கதை
நடிகை டாப்ஸி, தமிழில், வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். தொடர்ந்து, வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2 படங்களில் நடித்தார். இதற்கிடையே இந்தி சினிமாவுக்கும் சென்றார். அங்கு அவர் நடித்த, நாம் ஷபானா, பிங்க், ஜூத்வா 2, சமீபத்தில் தப்பட் உள்ளிட்ட படங்கள் ஹிட்டாகின. இப்போது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மித்தாலி ராஜ் கதையான சபாஷ் மித்து உட்பட சில படங்களில் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











