இயற்கையை மதிக்காமல் போனதால்தான் இத்தனை பேரழிவு! - சூர்யா
அகரம் அறக்கட்டளையின் யாதும் ஊரே கருத்தரங்கம்... சூர்யா, சிவகுமார் பங்கேற்பு
வெள்ள நிவாரணப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய தன்னார்வலர்களை கவுரவிக்கும் வகையில் யாதும் ஊரே என்ற பெயரில் அகரம் பவுண்டேஷன் நடத்தும் இரண்டு நாள் கருத்தரங்கு இன்று சென்னையில் தொடங்கியது.

அகரம் அமைப்புடன் தி ஹிந்து, புதிய தலைமுறை நிறுவனங்களும் இந்த நிகழ்ச்சியை இணைந்து நடத்துகின்றன.

தி ஹிந்து குழுமத்தின் தலைவர் ராம், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் சத்ய நாராயணா, அகரம் அமைப்பின் நிறுவனர் சூர்யா, ராம சுப்ரமணியம், தமிழருவி மணியன், தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங், நடிகர் பார்த்திபன், நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நந்தா, ஏஎல் உதயா, அருமை சந்திரன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

கருத்தரங்கில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிறுவனத் தலைவர் சத்ய நாராயணா பேசுகையில், "இயல்பாக சென்னையில் வாழும் மக்களுக்கு என்று ஒரு நிறம் உண்டு. இவர்கள் தங்கள் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் கூட யாரென்று தெரியாமல் வாழ்வார்கள் என்றொரு பேச்சு உண்டு. அதே போல் இளைஞர்கள் என்றால் எப்போதும் பேஸ்புக் போன்ற சமுக வலைத்தளங்களிலேயே தங்களுடைய பொன்னான நேரத்தைச் செலவிட்டு வீணாக்குகிறார்கள் என்பார்கள்.

அதையெல்லாம் இந்த மழை வெள்ள நேரத்தில் களத்தில் இறங்கி நிவாரண பணியில் ஈடுப்பட்ட மக்களும், இளைஞர்களும் பொய்ப்பித்து உள்ளனர். ஏன் புதிய தலைமுறை நிறுவனமே தங்களுடைய ஒளிபரப்பை நிகழ்த்த இயலாமல் ஸ்தம்பித்து நின்றது. ஆனால் அதை எல்லாம் தாண்டி மீண்டும் எழுந்து நின்று தங்களுடைய ஒளிபரப்பைத் துவங்கியது. அதை போல் வெள்ள நேரத்தில் சென்னையையே மீண்டு எழச் செய்தது இந்த இளைஞர்களின் சிறப்பான நிவாரண பணிதான்," என்றார்.
பின்னர் அகரம் அமைப்பின் நிறுவனர் சூர்யா பேசுகையில், "இயற்கை என்பது ஒன்றை ஒன்று சார்ந்தது. மனிதர்கள் இல்லாமல் பறவைகள் வாழலாம். ஆனால் பறவைகள் இல்லாமல் மனிதர்களால் நிச்சயம் வாழ முடியாது என்பதுதான் உண்மை. பறவைகள் இல்லாவிட்டால் பூச்சிகள் இனம் மனித இனத்தை நிச்சயம் அழித்தே இருக்கும். பறவைகள்தான் பூச்சிகளை உண்டு நம்மை காப்பற்றி வருகிறது.

தமிழ் மக்களாகிய நாம் தொன்றுதொட்டு இயற்கையைப் போற்றி, மதித்து வணங்கி வருகிறோம். அப்படிபட்ட நாம் இயற்கையை நேசிக்காமல் போனதால்தான் இதை போன்ற இயற்க்கை பேரழிவுகள் ஏற்பட்டு வருகின்றன. ஆகவே நாம் இயற்கையை நேசிக்க வேண்டும். 'யாதும் ஊரே' என்பது ஒரே ஒரு மனிதரின் முகம் அல்ல. இது நிவாரண பணியில் ஈடுபட்ட பல்வேறு மக்கள் மற்றும் இளைஞர்களின் முகம்," என்றார் சூர்யா.


Click it and Unblock the Notifications











