யாரிடமும் நான் நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை!- ஆர் பி சவுத்ரி
சென்னை: சினிமா எடுப்பது என் தொழில். நான் அதை மட்டுமே செய்கிறேன். யாரிடமும் நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை, என்று ஜில்லா படத் தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி கூறினார்.
25 ஆண்டுகளாக சினிமா எடுத்து வருபவர் ஆர்பி சவுத்ரி. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் இதுவரை 84 படங்களைத் தயாரித்துள்ளார். இப்போது தயாரித்துள்ள ஜில்லா அவரது 85வது படம்.
நாளை இந்தப் படம் வெளியாவதைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:

விஜய்யும் வெள்ளி விழாவும்...
‘‘நடிகர் விஜய்க்கும், சூப்பர் குட் பிலிம்சுக்கும் எப்போதுமே ஒரு ராசி உண்டு. எங்கள் தயாரிப்பில் அவர் ஏற்கனவே நடித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், திருப்பாச்சி ஆகிய படங்கள் வெள்ளிவிழா கண்டன.

ஜில்லா
இப்போது அவர் நடித்துள்ள ‘ஜில்லா,' எங்கள் தயாரிப்பில் 85-வது படம். நாங்கள் தயாரித்த ‘அரண்' என்ற படத்தில், மோகன்லால் நடித்தார். அந்த படம், ‘கீர்த்தி சக்ரா' என்ற பெயரில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றன.

பெரிய வெற்றி
எங்கள் நிறுவனத்துக்கு, இது வெள்ளிவிழா ஆண்டு. அதில், விஜய்யும், மோகன்லாலும் இணைந்து நடித்து, ‘ஜில்லா' படம் வெளிவர இருக்கிறது. இதுவரை வந்த விஜய் படங்களை விட, இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும், வெள்ளி விழா காணும் என்று நம்புகிறேன்.

மோகன்லாலுக்கு கேரள உரிமை
படத்தின் மீது உள்ள நம்பிக்கையில், மோகன்லால் சம்பளம் வாங்கிக் கொள்ளவில்லை. அதற்கு பதில், கேரள வினியோக உரிமையை வாங்கியிருக்கிறார். அங்கு அவர், 300 தியேட்டர்களில் படத்தை வெளியிடுகிறார். மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் 250 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.

ரசனை மாறிடுச்சி
முன்பெல்லாம் கவித்துவமான காதல் படங்களையும், குடும்ப சென்டிமெண்ட் கதைகளையும் மட்டுமே தேர்வு செய்து படமாக்கினோம். இப்போது அதுபோன்ற கதைகள், டி.வி.தொடர்களில் வந்து கொண்டிருக்கின்றன. ரசிகர்களின் ரசனையும் மாறிவிட்டது. அதனால், காலத்துக்கு ஏற்ப ஜனரஞ்சகமான படங்களை தயாரிக்கிறோம்.

சரத்குமார்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், சரத்குமார் 13 படங்களில் நடித்து இருக்கிறார். எங்கள் நிறுவனத்தில் அதிக படங்களில் நடித்த கதாநாயகன் இவர்தான். அதேபோல் எங்கள் நிறுவனத்துக்காக கே.எஸ்.ரவிகுமார் 6 படங்களை இயக்கியிருக்கிறார். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுக நடிகர்-நடிகைகள், இயக்குநர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.

நன்றியை எதிர்ப்பார்ப்பதில்லை
‘‘கடமையை செய். பலனை எதிர்பாராதே'' என்று சொல்வார்கள். அதன்படி, சினிமா எடுப்பது என் தொழில். அதை மட்டும் நான் செய்கிறேன். யாரிடமும் நாங்கள் நன்றியை எதிர்பார்ப்பதில்லை.

ஓய்வு
எனக்கு ஓய்வு பெறும் வயது வந்துவிட்டது. எனவே, ‘ஜில்லா' படத்தில் என் மகன்கள் சுரேஷ், ஜீவன், ரமேஷ், ஜீவா ஆகிய 4 பேர்களையும் பங்குதாரர்களாக்கி இருக்கிறேன். இனி அவர்கள் சூப்பர் குட் படங்களின் இணை தயாரிப்பாளர்களாக இருப்பார்கள்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











