வி.பி.எஃப் கட்டணத்துக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம்.. டி.ராஜேந்தர் திடீர் அறிவிப்பு
சென்னை: வி.பி.எஃப் கட்டண சர்ச்சை தொடர்பாக விரைவில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்று டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் இயக்குனரும் தயாரிப்பாளருமான ராமநாராயணனின் மகன் முரளி ராம நாராயணன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட டி.ராஜேந்தர் மற்றும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

புதிய சங்கம்
பின்னர் அவர் இந்த தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்றும் இதில் முறைகேடு நடந்ததாகவும் புகார் கூறிய டி.ராஜேந்தர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற பெயரில் புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளார். இந்தச் சங்கத்தின் முதல் செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது.

பாக்கித் தொகை
அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் விவரம்: தமிழ்நாட்டில் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் நிலவிவரும் வி.பி.எஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், மற்றும் க்யூப் மற்றும் இதர சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களிடமிருந்து தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பாக்கித் தொகையை அந்த நிறுவனங்கள் உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம்.

செலுத்த இயலாது
எங்களுடைய தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் க்யூப் மற்றும் சர்வீஸ் புரொவைடர் நிறுவனங்களுடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல விதங்களில் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு அவர்கள் செவி சாய்க்காத காரணத்தாலும் வேறு சில காரணங்களைச் சொல்லிக் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பதாலும் க்யூப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்த காரணத்தாலும், இன்று கூட்டப்பட்ட எங்களது சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் எங்களால் இனிமேல் வி.பி.எஃப் கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உறுதியாக இருக்கிறோம்
2. படத்தைத் திரையிடுவதற்கான சர்வீஸ் கட்டணம் ஒரு திரையரங்கிற்கு ரூ.1,500 தவிர எங்களால் எந்த விதத்திலும் வி.பி.எஃப் மற்றும் எந்தக் கட்டணமும் செலுத்த இயலாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

வசூலிப்பது நியாயம்
3. வட இந்திய கம்பெனிகளுக்கு வி.பி.எஃப் கட்டணம் வாங்கிக் கொள்ளாமலே படத்தைத் திரையிட வழிசெய்யும்போது தென்னிந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களையும், விநியோகஸ்தர்களையும் பாகுபடுத்தி எங்களைப் பழிவாங்குவது, எந்த அடிப்படையில் எங்களிடம் மட்டும் வி.பி.எஃப் வசூலிப்பது நியாயம் என்றும் மற்றும் எங்களிடம் மட்டும் வி.பி.எஃப் வசூலிப்பது நியாயமானதாகத் தெரியவில்லை.

கவன ஈர்ப்பு
மேற்கண்ட கோரிக்கைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் எங்களுக்குரிய பதிலைத் தராவிட்டால் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்துவோம் என்பதை இந்தச் செயற்குழுக் கூட்டத்தின் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











