'வாங்க ரியல் சூப்பர் ஸ்டார்ஸ்'..நுங்கம்பாக்கம் போலீசாரை வீட்டுக்கு அழைத்து ரஜினிகாந்த் பாராட்டு
நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தன்னை வீட்டிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்ற போலீசாரை தன் வீட்டுக்கு அழைத்து ரஜினி பாராட்டி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று நடந்த செஸ் ஒலிம்பியாட் கலந்து கொண்டார் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் அவரை பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர்.
தனக்கு பாதுகாப்பு கொடுத்த போலீசாரை வீட்டுக்கே அழைத்து ரஜினி பாராட்டியுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் பிரதமர் விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தின் உச்ச நடிகராக இருந்தாலும் சிறு சிறு விஷயங்களில் கவனிக்க கூடியவர் என்பது இன்றைய ஒரு சம்பவத்தில் தெரியவந்துள்ளது. நேற்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட விவிஐபிக்கள், பிரபலங்கள் கலந்து கொண்டனர். மிகப்பெரிய விஐபிகள் கலந்து கொள்ளும் கூட்டம் என்பதால் பாதுகாப்பும் பலமாக இருந்தது.

ரஜினியை அழைத்து வர முதல்வர் இட்ட உத்தரவு
பிரதமர் நிகழ்ச்சி என்பதால் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்கள் அழைக்கப்பட்டிருந்தனர். செஸ் விளையாட்டை விரும்பும் ரஜினிகாந்த இந்த போட்டியின் தொடக்க விளம்பரங்களை ஆரம்பத்திலேயே பாராட்டியிருந்தார். பின்னர் நேற்று முன் தினம் தனது டிவிட்டர் பக்கத்தில் "செஸ் விளையாட்டு தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" என்று கூறியிருந்தார். செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள ரஜினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தார்.

ரஜினிகாந்தை பாதுகாப்பாக அழைத்துச் சென்ற நுங்கம்பாக்கம் போலீஸார்
பிரதமர் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் சென்னையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் காணப்படும். நேரு உள்விளையாட்டு அரங்கம் பகுதியிலும் அதிக நெரிசல் இருக்கும். பொதுமக்கள், ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் ரஜினிகாந்த் வருவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு, முதல்வர் ஸ்டாலின் ரஜினிகாந்தை சரியான முறையில் அழைத்துவர உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். நடிகர் ரஜினிகாந்த் அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டு நேரு ஸ்டேடியம் வந்தடைய வசதியாக அவரை அழைத்துவர நுங்கம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

காவலர் பணியை மறக்காமல் அழைத்து பாராட்டிய ரஜினி
இதையடுத்து நுங்கம்பாக்கம் ஏசி தலைமையில் எஸ்.ஐ.மருது உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒரு பாதுகாப்பு வாகனத்துடன் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரை அழைத்துச் சென்றனர். போக்குவரத்தை சீர்படுத்தி எளிதாக அரங்கத்தை அடையும் வகையில் அழைத்துச்சென்றனர். பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள அவரது இருக்கையில் அவரை அமர வைக்கும் வரை உடனிருந்து உதவினர். தனக்கு உதவியவர்கள் போலீசார் அது அவரது பணி என்று சாதாரணமாக இந்த விஷயத்தை கடந்துவிடாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடைய செயலைப் பார்த்து வியந்து அவர்களை தனது வீட்டிற்கு இன்று காலை அழைத்தார்.

ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் போலீஸார் நெகிழ்ச்சி
வீட்டிற்கு வந்த அவர்களை வரவேற்று "வாங்க ரியல் சூப்பர் ஸ்டார்" என்று பாராட்டினார். போலீசார் அவரது பாராட்டுக்கு நன்றி தெரிவித்தனர். ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்தின் இந்த செயல் சமூக வலைத்தளங்களில் மிகுந்த பாராட்டை பெற்று வருகிறது. இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசாரிடம் பேசிய போது "நாங்கள் சாதாரணமாக எங்கள் வேலையைத்தான் செய்தோம், இதை இந்த அளவுக்கு மதித்து அவர் வீட்டுக்கு அழைத்து பாராட்டியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது. தமிழகத்தின், சொல்லப்போனால் இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினிகாந்த் சாதாரண காவலர்களின் பணிச்சுமையை மனதில் வைத்து அவர்களை அழைத்து பாராட்டியது உண்மையிலேயே அவர் அவர் தான் ரியல் சூப்பர் ஸ்டார்" என பாராட்டினர் தற்போது ரஜினிகாந்தின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.


Click it and Unblock the Notifications











