கர்நாடக மக்கள் கொண்டாடும் இந்த அம்பரீஷ் யார்?
Recommended Video

பெங்களூர்: கர்நாடக மக்கள் அம்பரீஷை கொண்டாட காரணம் இல்லாமல் இல்லை.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மாரடைப்பால் நேற்று இரவு பெங்களூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66. அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக பெங்களூரில் உள்ள கந்தீரவா ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த அம்பரீஷ் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

மாண்டியா
1952ம் ஆண்டு மே மாதம் 29ம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள தொட்டரசினகெரே கிராமத்தில் பிறந்தவர் அம்பரீஷ். அவரின் இயற்பெயர் மளவாலி ஹச்சே கவுடா அமர்நாத். படத்திற்காக வைத்த பெயர் தான் அம்பரீஷ். காலப்போக்கில் அதுவே அவரின் நிரந்தர பெயராகிவிட்டது. அவர் 1972ம் ஆண்டு வெளியான தேசிய விருது பெற்ற நாகரஹாவு படம் மூலம் நடிகர் ஆனார்.

ஹீரோ
முதல் படத்தை அடுத்து அம்பரீஷ் சில காலம் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு அவர் ஹீரோவாகி பல வெற்றிப் படங்களை அளித்துள்ளார். 1994ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்தார். அதன் பிறகு அவர் ஜனதா தள கட்சியில் சேர்ந்தார். 1998ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

காங்கிரஸ்
சித்தராமையா முதல்வராக இருந்தபோது அம்பரீஷ் கர்நாடக மாநில வீட்டு வசதித் துறை அமைச்சராக இருந்தார். அவர் 2013ம் ஆண்டு மே மாதம் முதல் 2016ம் ஆண்டு ஜூன் மாதம் வரை அந்த பதவியில் இருந்தார். பின்னர் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மாண்டியா தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். 14வது லோக்சபாவில் அவர் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராக இருந்தார். காவிரி விவகாரம் தொடர்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

விருதுகள்
2013ம் ஆண்டு தார்வாட் பல்கலைக்கழகம் அம்பரீஷுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது. இது தவிர அவர் தனது சிறப்பான நடிப்புத் திறமைக்காக மாநில அரசின் விருதுகள் மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதுகள் பல பெற்றுள்ளார். அம்பரீஷின் மனைவி சுமலதா பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











