நம்ம சொன்னதை தான் விஷால், ஐசரி கணேஷிடம் ஆளுநரும் சொல்லியிருக்கிறார்
சென்னை:மக்கள் சொன்னதை தான் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் பாண்டவர் அணி மற்றும் சுவாமி சங்கரதாஸ் அணியிடம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சங்க தேர்தலை வரும் 23ம் தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில் தேர்தலில் பல குளறுபடிகள் இருப்பதாகக் கூறி அதை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.

முன்னதாக எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இதையடுத்து பாண்டவர் அணியை சேர்ந்த விஷால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினார். மேலும் தேர்தல் தொடர்பாக பாண்டவர் அணி சென்னை உயர் நீதிமன்றத்தை இன்று அணுகியுள்ளது.
இந்நிலையில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினரும் ஆளுநரை சந்தித்தனர். இந்நிலையில் இது குறித்து சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேட்டி அளித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விஷாலின் பாண்டவர் அணியை சேர்ந்தவர்கள் ஆளுநரை சந்தித்தனர். அதனால் நாங்களும் அவரை சந்தித்து பேசினோம். நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது தொடர்பாக ஆளுநரிடம் புகார் மனு கொடுத்தோம். நடிகர் சங்க தேர்தலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஆளுநர் எங்களிடம் தெரிவித்தார்.
பாண்டவர் அணி பொய்யாக சொல்லி வருகிறது. அந்த அணியில் ஒற்றுமை இல்லை. நடிகர் சங்கத்தில் பிரச்சனை ஏற்பட நந்தா மற்றும் ரமணா ஆகியோர் தான் காரணம். நடிகர் சங்கம் பிளவுபட்டதற்கு விஷால் மட்டும் அல்ல நாசர் மற்றும் கார்த்தி ஆகியோரும் காரணம் என்றார்.
நீதிமன்றத்தை அணுகியுள்ள விஷால் வாய்மை வெல்லும், நல்லது நடக்கும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். பாண்டவர் அணியினர் சுவாமி சங்கரதாஸ் அணியை ராதாரவி அணி என்றே அழைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக பாண்டவர் அணியும், சுவாமி சங்கதராஸ் அணியும் மாறி மாறி ஆளுநரை எதற்காக சந்திக்க வேண்டும். அவர் என்ன பண்ணுவார் என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலுக்கும், தனக்கும் தொடர்பு இல்லை என்று ஆளுநரே தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











