கன்னத்தில் அறை விழுந்ததா.. சண்டிகர் விமான நிலையத்தில் நடந்தது என்ன? கங்கனா விளக்கம்!
சென்னை: டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கங்கனா ரனாவத் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
நடிகையும் அரசியல்வாதியுமான கங்கனா ரனாவத் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். மக்களவைக்கு முதல்முறையாக தேர்வு செய்யப்பட்ட கங்கனாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

100 ரூபாய்க்காக போராட்டம்: இந்நிலையில், நேற்று சண்டிகர் விமான நிலையத்துக்கு கங்கனா ரனாவத் வந்த போது,அங்கிருந்த CISF பெண் காவலர் ஒருவருக்கும், நடிகை கங்கனாவிற்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அந்த பெண் காவலர் அறைந்தார். இந்த செய்தி காட்டுத்தீ போல பரவிய நிலையில், கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலரான குல்விந்தர் கவுர், கங்கனாவை தாக்கியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதில், 100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார் என தெரிவித்துள்ளார். மேலும், கங்கனாவை தாக்கியதற்காக அந்த பெண் அதிகாரி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்தது என்ன: இந்நிலையில், விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஊடகம் மற்றும் மக்களிடம் இருந்து எனக்கு தொடர்ந்து போன் வந்து கொண்டே இருக்கிறது. அனைவரும் பதற்றத்துடன் என்ன ஆச்சு என கேட்டுக்கொண்ட இருக்கிறார்கள். நான் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கிறேன். சணடிகரில் பாதுகாப்பு சோதனையின் போது இந்த சம்பவம் நடந்தது. பாதுகாப்பு சோதனை முடிந்து போது, மற்றொரு கேபினில் இருந்த CISF பெண் காவலர், எனது முகத்தின் மீது தாக்கினார். என்னை தகாத வார்த்தைகளால் பேசி திட்டினார். ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்டேன். அதற்கு விவசாயிகளின் போராட்டம்தான் காரணம் என அவர் கூறினார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரிப்பது எனக்கு கவலை அளிக்கிறது, இதை நாங்கள் எவ்வாறு கையாள்வது என அந்த வீடியோவில் கங்கனா பேசி உள்ளார்.
அடிக்கடி பிரச்சனை: நடிகை கங்கனா ரனாவத், இந்தியில் கேங்ஸ்டர் படம் மூலம் சினிமாவில் நடிக்க வந்தார். குறுகிய காலத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய கங்கனா, சினிமாவை கடந்து அரசியல் ரீதியாக கருத்துக்களையும் பேசி அவ்வப்போது பிரச்சனையில் சிக்கினார். பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நடிப்பில் கடந்தாண்டு வெளியான தக்கட் திரைப்படம் படுதோல்வியடைந்தது. 90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் வெறும் 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. அதே போல ராகவா லாரன்சுடன் ஜோடி போட்டு சந்திரமுகி 2 படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் படுதோல்வி அடைந்தது. சந்திரமுகி முதல் பாகம் வசூலை அள்ளிய நிலையில் இரண்டாம் பாகம் வெளியான சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு ஓடி விட்டது.
எமர்ஜென்சி: தற்போது கங்கனா ரனாவத்,மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்ஸி காலகட்டத்தை மையமாக வைத்து வைத்து எமர்ஜென்ஸி உருவாகி உள்ளார். இதில் இந்திரா காந்தி கேரக்டரில் கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாத நிலையில், கங்கனா மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகி உள்ளார். இனிமேலும் அவர் தொடர்ந்த நடிப்பாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











