வாட்டர் மெலன் ஸ்டாரோடு அறந்தாங்கி நிஷாவுக்கும் அடியாம்.. குக் வித் கோமாளி செட்டில் நடந்தது இதுதான்
சென்னை: தமிழ்நாட்டில் தன்னைத்தானே வாட்டர் மெலன் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர் திவாகர். மதுரையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் வீடியோக்கள் போட்டுக்கொண்டிருந்தார். அதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் பங்கேற்றார். அதில் பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார். அடுத்ததாக விஜய் டிவியின் குக் வித் கோமாளியில் பங்கேற்றார். அப்போது ஏற்பட்ட மோதலில் தன்னை கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் தாக்கிவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
மதுரையை சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட் திவாகர்; கஜினி சூர்யா போல் தர்பூசணியை வைத்துக்கொண்டு வீடியோ வெளியிட்டார். அது வைரலானதையடுத்து தொடர்ந்து வீடியோக்களை பதிவேற்றினார். அந்த வீடியோக்கள் எல்லாம் ரசிக்கும்படி இருக்காது என்பது வேறு கதை. ஆனால் தொடர்ச்சியாக சென்சேஷனல் ஆனதால் தமிழ்நாட்டில் புகழடைந்தார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அங்கே சென்றும் வழக்கம்போல் தனது நடவடிக்கைகளால் மற்றவர்களை இரிட்டேட் செய்தார்.

எச்சரித்த போட்டியாளர்கள்: மேலும் டைட்டில் வின்னர் திவ்யா கணேஷிடம் அவர் வழிந்த விதத்தை கண்ணால் பார்க்க முடியவில்லை. இதுவே வெளியே மட்டும் இப்படி ஒருவர் செய்திருந்தால் நடப்பதே வேறு என்று திவ்யாவே காண்டாகும் அளவுக்கு நிலைமை சென்றது. அதுமட்டுமின்றி அவர் நடந்துகொண்ட விதத்தை பார்த்து விஜய் சேதுபதியும், வீட்டில் இருந்த போட்டியாளர்களும் அவரை எவ்வளவோ எச்சரித்து பார்த்தார்கள். அன்போடு சொல்லி பார்த்தார்கள். ஆனால் அவர் செயல்பாட்டினில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பிறகு பாதியிலேயே எவிக்ட் செய்யப்பட்டார்.
குக் வித் கோமாளியில் திவாகர்: சூழல் இப்படி இருக்க குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அப்போது கானா வினோத், புகழ், மாகாபா ஆனந்த் ஆகியோர் தன்னை தாக்கியதாகவும்; அதிலும் ஆனந்த் இரும்பு ராடினை வைத்து தாக்கியதில் தனக்கு காலில் காயம் ஏற்பட்டதாகவும் சொல்லி சென்னை நஸ்ரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் கானா வினோத், புகழ் ஆகியோர் காவல் நிலையத்துக்கு வந்ததாகவும்; மாகாபா ஆனந்த் வரவில்லை என்றும் தெரிகிறது. இதனையடுத்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
திவாகர் சொன்னது: இந்நிலையில் பிரபா என்ற ஒருவரிடம் நடந்த பிரச்னை குறித்து ஃபோனில் பேசிய ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதில் பேசிய திவாகர், "நான் வளர்ந்து வருவது புகழ் உள்ளிட்ட யாருக்குமே பிடிக்கவில்லை. இத்தனைக்கும் புகழுக்கும் எனக்கும் நட்பும் இல்லை பகையும் இல்லை. குக் வித் கோமாளிக்கு நான் சென்றதிலிருந்தே புகழ் என்னிடம் பேசவில்லை. அவர் எப்போதும் ஒரு ஜிம் பாயை கூடவே வைத்திருக்கிறார். ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது கானா வினோத் என்னை உருவ கேலி செய்தார்.
தாக்கிய ஆனந்த்: நான் பொறுத்துதான் போனேன். ஆனால் ஒருகட்டத்தில் என்னுடைய குடும்பத்தை பற்றி தவறாக பேசினார். அதனால் கோபமாகி மீண்டும் நான் திட்டினேன். அப்போது கானா வினோத், புகழ் மற்றும் அந்த ஜிம் பாய் என்னை தாக்கினார்கள். கீழே அமர்ந்திருந்த மாகாபா ஆனந்த்துக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. அவர் மது போதையில் இருந்துகொண்டு இரும்பு ராடை தூக்கி போட்டார். அதனால் எனது காலில் காயம் ஏற்பட்டுவிட்டது. அவர் சிவகார்த்திகேயனுக்கு எல்லாம் சீனியர் ஆங்கர். ஆனால் அறிவு என்பதே இல்லை. டீ குடிப்பது போல் மது குடிக்கிறார். இந்தப் பிரச்னையில் தடுப்பதற்காக வந்த அறந்தாங்கி நிஷா, சுனிதா உள்ளிட்டோருக்கும் அடி விழுந்தது" என்றார்.


Click it and Unblock the Notifications















