கேன்ஸ் விழாவில் டாம் குரூஸுக்கு கொடுத்த மரியாதையை 15 வருடத்துக்கு முன்னரே பெற்ற பசுபதி
சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பசுபதிக்கு கான்ஸ் திரைப்பட விழாவில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
அது குறித்து டிரீம் கேச்சர்ஸ் நிறுவனரும், தயாரிப்பாளருமான சுஜாதா நாராயணன் தனது ட்விட்டரில் நினைவு கூர்ந்திருக்கிறார்.
அதனைத் தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் நடிகர் பசுபதி அச்சம்பவம் தன் வாழ்வில் நடந்த அற்புதமான தருணம், தயாரிப்பாளர் ஷங்கருக்கும், இயக்குநர் வசந்தபாலனுக்கும் நன்றி எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

கான்சில் முதல் தமிழ்ப்படம்
பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சிறந்த சினிமா படைப்புகளை அங்கீகரிக்கும் ஒரு விழாவாக கான்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2007 கான்ஸ் விழாவில், திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையை வெயில் பெற்றிருக்கிறது. இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கிய அத்திரைப்படத்தில் பரத், பசுபதி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நெகிழ வைக்கும் சம்பவம்
2007 கான்ஸ் திரைப்பட விழாவில், 'வெயில்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு அங்கு திரையிடப்பட்டது. அவ்விழாவில் இயக்குநர் வசந்தபாலன், தயாரிப்பாளர் ஷங்கர், நடிகர் பசுபதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வெயில் திரைப்படத்தைப் பார்த்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் மேடைக்கு ஓடி வந்து நடிகர் பசுபதியின் கையைப் பற்றி கண்ணீர் சிந்தியிருக்கிறார். படத்தில் பசுபதியின் நடிப்பைப் பார்த்து அசந்து போய் பாராட்டித் தள்ளியிருக்கிறார். மேலும் அவ்விழாவில் பசுபதிக்கு எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி கௌரவித்திருக்கின்றனர் இதனை சுஜாதா நாராயணன் தனது ட்விட்டரில் பகிர்ந்து அச்சம்பவத்தை நினைவு கூர்ந்திருக்கிறார்.

எதார்த்தமான நடிகர்
தூள் திரைப்படத்தில் வில்லனாக நடித்த போது, நடிகர் பசுபதிக்குள் இவ்வளவு அழகான குணச்சித்திர நடிகர் ஒளிந்து இருந்திருக்கிறார் என ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அந்த அளவிற்கு அப்படத்தில் வில்லனாக மிரட்டினார். அதனைத் தொடர்ந்து, விருமாண்டியில் கொத்தாளத் தேவர் என்ற கதாப்பாத்திரத்தில் ரசிகர்களை நடுங்க வைத்தவர், அடுத்து தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வில்லனாக வலம் வரப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் மாறாக, இயற்கை, வெயில், ராமன் தேடிய சீதை, குசேலன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.

காமெடியிலும் கலக்கிய பசுபதி
எந்தக் கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதனை ஒரு நடிகர் தத்ரூபமாக செய்ய வேண்டும் என்பதற்கு பசுபதி ஓர் உதாரணம் என்றும் கூறலாம். வில்லனாக மிரட்டியவர், குணச்சித்திர வேடத்தில் ரசிக்க வைத்தவர், காமெடியிலும் சிரிக்க வைக்க முடியுமா? பசுபதியால் முடிந்தது. மும்பை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து காமெடியில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். அதன் பின்னர், இதற்குத் தானே ஆசைப்பட்டாய் படத்திலும் காமெடியில் ரசிக்க வைத்தார். அண்மையில், வெளிவந்த சர்ப்பட்டா பரம்பரை திரைப்படத்தில் குத்துச்சண்டை ஆசானாக மீண்டும் குணச்சித்திர வேடத்தில் அசரடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











