பொன்னியின் செல்வன் பாகம் 2-ல் ஆதித்ய கரிகாலன் விக்ரம் கதி என்ன? - அருள்மொழிவர்மன், வந்தியதேவன் நிலை?
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில் அருண்மொழி வர்மனும், வந்திய தேவனும் உயிரிழந்ததாக படம் முடிகிறது.
முடியும் முன் பொன்னித்தாய் கடலுக்குள் தேடுவதாக அதுவும் ஐஸ்வர்யா ராயாக உள்ளதாக காட்டி முடிக்கிறார்கள். ஆனால் வரலாறு வேறுவிதமாக உள்ளது. அது இரண்டாம் பாகத்தில் வரும் என்கிறார்கள்.
வரலாற்றில் ஆதித்ய கரிகாலன் கொல்லப்படுவார், அரியணை வாய்ப்பு அருள்மொழி வர்மனான ராஜராஜசோழனுக்கே.அது இரண்டாம் பாகத்தில் வருமா?

பொன்னியின் செல்வன் போல் இன்னும் சில வரலாற்று நாவல்கள்
வரலாற்றில் 350 ஆண்டுகாலம் தமிழகத்தின் பெரும்பகுதி, தென் இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகளை ஆண்ட சோழ மன்னர்களை மையப்படுத்தி பல வரலாற்று நாவல்கள் சிறு சிறு கற்பனையுடன் வந்துள்ளது. கல்கியின் பொன்னியின் செல்வன் பெரிதாக பேசப்பட்டாலும், ராஜராஜ சோழனுக்கு பின் 85 ஆண்டுகள் கழித்து வந்த குலோத்துங்க சோழன் (அநபாய சோழன்), கருணாகர பல்லவனை (இளையபல்லவனை) மையப்படுத்தி சாண்டில்யன் எழுதிய கடல்புறா போன்ற நாவல்களும் புகழ்பெற்றவை. இவைகளுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தவர் நீலகண்ட சாஸ்திரி எனு ஆய்வாளர் எனலாம்.

எகிறும் காட்சிகள், புரிபடாத புதிராக கதா பாத்திரங்கள்
பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்றுக்காட்சிகளை வரிசைப்படுத்த முடியாமல் காட்சிகள் எகிறுவதை காணலாம். 3 மணி நேரத்திற்குள் முடிக்கவேண்டுமே என்று சொன்னாலும் முதல்பாதி முழுவதும் பாடல்காட்சிகளிலேயே கழிகிறதே என்ற கேள்வியும் வைக்கப்படுகிறது. பழிவாங்களுக்கு அடிப்படையான வீரபாண்டியன் மரணம் ஒரே ஒரு காட்சியில் கட்டிலில் படுத்திருக்கும் நாசருடன் முடிந்துபோகிறது. பல கதா பாத்திரங்கள் திடீரென முளைக்கிறது, அது வந்தியதேவனுக்கு உதவுகிறது, ஏன் உதவ வேண்டும் என்கிற கேள்வி எழாமல் இல்லை.

முதலில் சிறுக கதை சொல்லியிருந்தால் பார்வையாளர்களுக்கு எளிதாக இருந்திருக்கும்
படகோட்டும் பூங்குழலி பாத்திரம் ஏதோ திடீர்னு வரும், படகிலிருந்து கார்த்தியை இறக்கிவிடும், ஆங்காங்கே வரும். சேந்தன் கேரக்டரும் அப்படியே. இப்படிப்பட்ட எகிறல்கள் கதைபடித்தவர்களுக்கு ஆதங்கத்தையும், படிக்காதவர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்துவது உண்மையே. பழுவேட்டரையர் சிற்றரசர்களை தூண்டி உத்தமசோழனுக்கு பட்டாபிஷேகம் செய்ய முயல்வது ராஜதுரோகம் என்று தெரிந்தும் பழுவேட்டரையார் மீது நடவடிக்கை எடுக்காத சோழ மன்னன் நாட்டுக்காக போரிட சென்ற அருள்மொழிவர்மனை கைது செய்ய பழுவேட்டரையர் சொல்லும் அற்ப காரணத்துக்கு ஒப்புக்கொள்கிறாராம். ஒட்டவில்லை. ஆனால் நாவலில் அப்படி இருக்கிறது என்றால் படிக்காதவர்களுக்கு கேள்வி வருமல்லவா?

விறுவிறுப்பாக செல்லும் இரண்டாம் பாகம்? எதிர்ப்பார்ப்புகள்
படத்தின் தொடக்கத்தில் சிறிதளவு படத்தின் பாத்திரங்கள், சம்பவம், நடைபெறும் காலம் குறித்து சொல்லியிருந்தால் படத்தில் டிராவல் பண்ணுவதில் சிக்கல் இருந்திருக்காது என சில குரல்கள் ஆங்காங்கே எழுந்தாலும் ஊரே ஒன்றுகூடி பாராட்டும்போது அது ஈனஸ்வரமாக மாறிப்போகிறது. முதல்பாகம் ஒரு சஸ்பென்ஸுடன் முடிகிறது. இரண்டாம் பாகத்தில் ஆதித்யகரிகாலன் வட பாகத்தை ஆளுகிறான், பின்னர் கொல்லப்படுகிறான் அவனது மரணம் மர்மம் நிறைந்ததாகவே கழிகிறது என்கிறார்கள். வரலாற்றில் மிகப்பெரிய பாத்திரமான ராஜராஜ சோழன் எனும் அருள்மொழி வர்மன் அரசாளுவார். ஆகவே இரண்டாம் பாகத்தில் பரபரப்பிற்கும் விறுவிறுப்பிற்கும் பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











