இன்னைக்கு கருப்பு வருமா? வராதா?.. பல கோடி கடனில் தத்தளிக்கும் எஸ்.ஆர். பிரபு.. என்ன பஞ்சாயத்து?
சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு என்ன சாபம் வந்ததோ தெரியவில்லை. முதலில் ஜனவரி 9ம் தேதி விஜய்யின் ஜன நாயகன் வரவேண்டியது கடைசி நேரத்தில் படம் வெளியாகவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே விஜய் மாறிய நிலையில், இன்னமும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை என தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்.
தனுஷின் கர படமும் பல தடைகளை சந்தித்து வெளியான நிலையில், படம் ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்கவில்லை. அதனால், அந்த படமும் தோல்வியை தழுவியது. அதே போலத்தான் பிரதீப் ரங்கநாதனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படமும். ஆனால், அந்த படம் கூட 66 கோடி வசூல் ஈட்டியதாக விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார்.

நேற்று நள்ளிரவு வெளியிட்ட ட்வீட்டில் கூட எஸ்.ஆர். பிரபு ரசிகர்களுக்கு நேர்மையாக இல்லமால் காலை 9 மணி காட்சி மட்டும் வெளியாகாது என்றார். இந்நிலையில், தற்போது இன்று படம் வெளியாகுமா? என்பதே சந்தேகம் என்கின்றனர்.
60 கோடி கடன்?: கருப்பு படம் வெளியாகாமல் கடைசி நேரத்தில் நிற்க காரணமே ஜஸ்வந்த் பண்டாரி என்பவரிடம் பைனான்ஸ் வாங்கி படம் பண்ணது தான் என்கின்றனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் எஸ். ஆர். பிரபு தான் கருப்பு படத்தை சூர்யாவை வைத்து தயாரித்தார். கடந்த வாரம் வரை படத்தின் டிரைலர் வெளியாகாமல் இருந்த நிலையில், விஜய் முதலமைச்சர் ஆவது தான் காரணம் என ஆர்ஜே பாலாஜி சொன்னது எல்லாமே பொய் என்றும் உண்மையே படத்திற்கு சுமார் 60 கோடி வரை கடன் இருப்பதாக ஒரு சிலரும், 28 கோடி கடன் இருப்பதாக சில தகவல்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கடைசி நேரத்தில் கத்தி: கருப்பு படம் வெளியாகி வெற்றிப் பெற்றால் தானே எஸ்.ஆர். பிரபு படத்துக்காக வாங்கிய கடனை அடைக்க முடியும். இப்படி படம் வெளியாக விடாமல் தடுத்தால் தயாரிப்பாளர் என்ன செய்வார் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஆனால், ஒரு வேளை படம் வெளியாகி ஃப்ளாப் ஆகிவிட்டால் தயாரிப்பாளர் அதை ஒரு காரணமாகக் கூறி மீண்டும் கடனை அடைக்க மாட்டார் என்பதால் தான் கடைசி நேரத்தில் பைனான்ஸியர்கள் இப்படி கத்தி வைக்கின்றனர் என்கின்றனர்.
நடிகர்களின் சம்பளம் தான் காரணம்?: தயாரிப்பாளர்கள் இந்த அளவுக்கு கடன் சுமையால் கஷ்டப்பட காரணமே நடிகர்களின் மார்க்கெட்டை தாண்டி அவர்களுக்கு வழங்கப்படும் அதிகப்படியான சம்பளம் தான் காரணம் என்கின்றனர். குறைந்த பட்ஜெட்டில் குறைவான சம்பளத்தை வாங்கிக் கொண்டு நடிகர்கள் படங்களில் நடித்து வந்தால் பல தயாரிப்பாளர்கள் இப்படி கடனில் கஷ்டப்படமாட்டார்கள் என்கின்றனர்.
மாலை வெளியாகுமா?: 9 மணி ஸ்பெஷல் ஷோ தான் ரிலீஸ் ஆகாது என நேற்று இரவு வரை எஸ்.ஆர். பிரபு அறிவித்த நிலையில், 11.30 மணி காட்சியும் வெளியாகாது என்று பல தியேட்டர்கள் ரீஃபண்ட் பணிகளை ஆரம்பித்து விட்டனர். இன்று மாலை கூட படம் வெளியாவதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. இந்த வாரமே படம் வெளியாகுமா? என்பதே கேள்விக்குறியாக உள்ளது. கடைசி நேரத்தில் ஹீரோ வாங்கிய சில கோடி சம்பளத்தை தியாகம் செய்ய முன் வந்தால் மட்டுமே பஞ்சாயத்து தீரும் என்கின்றனர். விரைவில் கருப்பு படம் வெளியாக வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications