ரசிகர்களின் கொண்டாட்டத்தில் வாத்தி.. என்னென்ன விஷயங்கள் ஈர்க்கின்றன?
சென்னை: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் வாத்தி படம் எந்தெந்த விஷயங்களில் ரசிக்க வைத்தது என்பது குறித்த ஒரு பார்வை.
திருச்சிற்றம்பலம் வெற்றிக்கு பிறகு தனுஷ் நடித்திருக்கும் படம் வாத்தி. வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படத்தில் சம்யுக்தா, சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்துவருகின்றனர். படத்தில் ரசிக்கும்படி அமைந்த விஷயங்கள்..

வழக்கம்போல் தனுஷ் எனும் நடிப்பு அசுரன்
படத்தில் ஒற்றை தூணாக நிற்கிறார் தனுஷ். தான் எவ்வளவு பெரிய நடிகன் என்பதை பல படங்களில் நிரூபித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்கு கொஞ்சம் ஸ்பெஷல். ஏனெனில் இதுவரை அவர் ஏற்றிடாத கதாபாத்திரம். அசுரன் படத்தில் எப்படி நடுத்தர வயது தந்தையாக கலக்கினாரோ அதேபோல் இதில் வாத்தியாராக கலக்குகிறார். முதல் சண்டை காட்சியில் தனுஷின் எனர்ஜியை பார்க்க பார்க்க ரசிகர்களுக்கும் எனர்ஜி தொற்றிக்கொள்கிறது. முக்கியமாக, ஊரை விட்டு துரத்தப்படும் காட்சியில் தனுஷ் நடந்துவரும்போது தனது காலும் நடிக்கும் என்பதை வெகு இயல்பாக உணர்த்தியிருக்கிறார் வாத்தி தனுஷ்.

பழைய வசனங்கள்தான் ஆனாலும் ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன
படத்தின் சில இடங்களில் தனுஷின் பழைய வசனங்களையே பயன்படுத்தியிருப்பது ஈர்க்கிறது. தனுஷிடம் சமுத்திரகனி, "தம்மாத்துண்டு இருந்துட்டு என்னையே முடிச்சுவிட பார்க்குறியா" என வடசென்னை வசனத்தை பேசுவது, மாணவ, மாணவிகளிடம், "என்ன பயப்படுறியா குமாரு" என புதுப்பேட்டை வசனத்தை தனுஷ் சொல்வது என அவை ஃப்ரெஷ்ஷாக இருக்கின்றன.

கவனம் ஈர்க்கும் கென் கருணாஸ்
அசுரனில் தனுஷ் மகனாக நடித்த கென் கருணாஸ் இதில் தனுஷின் மாணவனாக நடித்திருக்கிறார். தாய், தந்தை இழப்பு, படிக்க ஆசை இருந்தும் விரக்தியால் அதை தொடர முடியாமல் சாராய கடையில் கிடப்பது என கென் கருணாஸை ஸ்க்ரீனில் பார்த்தாலே நமக்கும் ஒருவித சோகம் ஒட்டிக்கொள்கிறது. குறிப்பாக, சக தனுஷுக்கு தண்ணீர் அடித்துவிடுவது, அவருக்காக ஊர் மத்தியில் நின்றுகொண்டு சக மாணவ, மாணவிகளை திட்டுவது, இடத்திலிருந்து எழுந்திருக்க சொல்லும் மாணவரிடம் முடியாது என திமிராக மறுப்பது என அதகளம் செய்கிறார்.

ஜிவி பிரகாஷ் எனும் இசை அசுரன்
படத்தின் இன்னொரு ப்ளஸ். ஜிவி பிரகாஷின் இசை. ஏற்கனவே அசுரனில் தனுஷும், ஜிவி பிரகாஷும் சேர்ந்து அனைவரையும் கவர்ந்துவிட்டனர். தற்போது இந்தப் படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள். படம் கமர்ஷியலாக நகர்ந்தாலும் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாத ஜிவி பிரகாஷ் பல ஜானர்களில் இசையை கலந்துகட்டி கொட்டியிருக்கிறார். வா வாத்தியில் பக்கா மெலோடி கிங்காக ஜொலிக்கும் ஜிவி; இரண்டாம் பாதியின் சண்டை காட்சியில் க்ளாசிக் ஜானரில் சன்னதம் வந்து ஆடியதுபோல் அமைத்திருக்கும் இசை நிச்சயம் பலரால் பேசப்படும்.


Click it and Unblock the Notifications











