Don't Miss!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Lifestyle யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
சினிமா எடுக்க உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? .. "நச்"சுன்னு ஒரு விமர்சனம்!
சென்னை : சமீபத்தில் வெளியான 'தரமணி', 'விவேகம்' உள்ளிட்ட திரைப்படங்களால் சமூக ஊடகங்களில் படத் தயாரிப்புக் குழுவினருக்கும், விமர்சகர்களுக்குமான மோதல் வலுவாகி வருகிறது.
உலகமே போற்றும் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி சமூக வலைதள விமர்சகர்களுக்கு இருக்கிறதா எனும் சிக்கலான கேள்வி ஒன்று சினிமாவில் இருப்பவர்களாலும், ரசிகர்களாலும் வைக்கப்படுகிறது.
அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழ் சினிமாவின் பெருமைகள் என நையாண்டியாக ஒரு பதிவை எழுதியுள்ளார் சினிமா ஊடக விமர்சகர் ஷாலின் மரிய லாரன்ஸ். அந்தப் பதிவு இதுதான்... உலகமே போற்றும் தமிழ் சினிமாவை விமர்சிக்கும் தகுதி இருக்கிறதா நமக்கு? வாருங்கள் ஆராய்வோம்.
வடசென்னைக்காரனெல்லாம் கருப்பன், ரவுடி, கொலைகாரன், கூலிப்படை -இப்படிக்கு தமிழ் சினிமா.
ஆன்டனி, டேவிட் என்று கிறிஸ்தவப் பெயர் வைத்தவனெல்லாம் கடத்தல்காரன், வில்லனுக்கு அடியாள் -இப்படிக்கு தமிழ் சினிமா.
நாங்கள் சண்டை போட்டால் பாகிஸ்தான் தீவிரவாதிகளோடுதான் சண்டை போடுவோம், இங்கே தென் தமிழ்நாட்டில் சாதி வெறியோடு சுற்றித் திரியும் மிருகங்களை பற்றி கவலைப் பட மாட்டோம் -இப்படிக்கு தமிழ் சினிமா.
கேரளப் பெண்கள் எல்லோருமே வெறும் ரவிக்கை பாவாடையோடு ஆண்களைத் தேய்த்துக் கொண்டு வலம் வருவார்கள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
வன்புணர்வு செய்த வில்லனை ஹீரோயின் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும், அவன் மேல் கேஸ் கொடுக்க கூடாது -இப்படிக்கு தமிழ் சினிமா
இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகள் -இப்படிக்கு தமிழ் சினிமா .
படித்த பெண்கள் எல்லாம் திமிர் பிடித்தவர்கள், ஹீரோ அவர்களை அடிப்பார் சினிமாவில் குடும்ப வன்முறை நியாயப்படுத்தப்படும் -இப்படிக்கு தமிழ் சினிமா .
"அடிடா அவள ,வெட்றா அவள ", "இந்த பொம்பளையே இப்படிதான் தெரிஞ்சு போச்சுடா " -இப்படிக்கு பெண்களைப் பற்றி PhD படித்த தமிழ் சினிமா .
குறிப்பிட்ட சாதியினரை மட்டுமே தொடர்ந்து நீதிமான், ஆளப் பிறந்தவர்கள் எனவும், தாழ்த்தப்பட்டவர்கள் எனக் கருதப்படுபவர்கள் அவர்களது செருப்பைக் கடைசி வரைக்கும் தொடச்சிக்க்ட்டே இருக்கணும் -இப்படிக்கு DNA ஆராய்ச்சி செய்த தமிழ் சினிமா .
ஹீரோயினோடு காதல் காட்சி வைக்க துப்பில்லாமல், மாமியாரின் முதுகை தேய்த்துவிடும் காட்சி வைத்த -உங்கள் தமிழ் சினிமா .
ஒரு பெண்ணை அடக்க வேண்டுமென்றால் அவளுக்கு பொதுவில் ஹீரோ கட்டாய முத்தம் கொடுக்க வேண்டும் இல்லை கட்டாயத் தாலி கட்ட வேண்டும் என்று சொல்லி கொடுத்த -உங்கள் தமிழ் சினிமா
திரையில் தமிழ் பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என்று கிளாஸ் எடுப்போம் .நிஜ வாழ்க்கையில் பப்பில் கும்மாளமடிப்போம் -இப்படிக்கு சினிமாவை வைத்து மனவன்மத்தை தீர்த்துக் கொள்ளும் தமிழ் சினிமா .
கதாநாயகி கூட வரும் பெண்களை 'Item' என்று கிண்டலடிப்போம் -இப்படிக்கு genology படித்த தமிழ் சினிமா .
கணவனை இழந்த பெண்கள் என்றால் எந்நேரமும் செக்ஸை பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று சொல்லுவோம் -இப்படிக்கு உளவியல் படித்த தமிழ் சினிமா .
கரன்ட் ஷாக் கொடுத்தாலும் சிரிக்கும் ஹீரோ, புல்லட்டைக் கையில் பிடிக்கும் ஹீரோ -இப்படிக்கு அறிவியல் விதிகளை மாற்றி அமைத்த தமிழ் சினிமா .
ருத்ரய்யா போன்ற நல்ல இயக்குனர்களை -வாழ்வாதாரம் இல்லாமல் ஓடவிட்ட தமிழ் சினிமா
அரசியலுக்கு வரமாட்டோம் ஆனால் ஹீரோ என்ட்ரி பாடலில் அவ்வளவும் அரசியல் இருக்கும் -இப்படிக்கு கேவல அரசியல் செய்து மார்க்கெட்டிங்கைத் தக்கவைக்கும் தமிழ் சினிமா .
வடசென்னை பெண் வேடத்திற்கும் மும்பையில் இருந்து ஹீரோயின்களைத் தேடிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் -சமத்துவ தமிழ் சினிமா .
டேனியல் ராஜாவையும், ஜோசப் விஜய்யையும் பெயர் மாற்றவைத்த தமிழ் சினிமா .
ஹீரோ நரைத்த முடியுடன் இருப்பார், ஹீரோயின் 15 வயதுக்குள் இருக்கவேண்டுமென தேடி பிடிக்கும் - Matured தமிழ் சினிமா .
டீச்சரகளை ஆபாசமாக சித்தரித்த தமிழ் சினிமா .
நர்ஸுகளை டாக்டரிடம் கிளர்ச்சி அடைந்தவராகவே சித்தரிக்கும் தமிழ் சினிமா .
திருநங்கைகளை, மாற்று திறனாளிகளை இன்றுவரை கேலிசித்ரவதை செய்யும் தமிழ் சினிமா .
மாற்றுத் திறனாளிகள் கண்டுகளிக்கக் கூடியவகையில் அவர்களுக்கான வசதியை திரையரங்குகளிடம் டிமாண்ட் செய்யாத தமிழ் சினிமா .
35 வயதிற்குமேல் ஹீரோயின்களை அம்மாக்களாக, சகோதரிகளாக மட்டுமே ஏற்றுக்கொள்ளும் தமிழ் சினிமா .
வெளிநாட்டு மாப்பிள்ளைகள் அனைவரும் முட்டாள்களாய் காட்டும் தமிழ் சினிமா .
பெரும்பாலும் ஹிந்துத்துவ கொள்கைகளின் பிரச்சார பீரங்கியாக இருக்கும் தமிழ் சினிமா .
சாதிய வன்முறைகளுக்கு கொம்பு சீவி விடும் தமிழ் சினிமா .
ஜாதியை பாலூட்டி வளர்த்துக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா .
பெண்ணடிமைத்தனத்தை காட்சிகளில் செதுக்கி கொண்டிருக்கும் தமிழ் சினிமா .
இத்தகைய தமிழ் சினிமாவை விமர்சிப்பதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்கிற கேள்வி மூலை முடுக்கெல்லாம் ஒலிக்கிறது . கேட்பது எல்லாம் கரப்பான்பூச்சிகளும், நடிகர்களுக்கு ஜால்ரா போட்டு வாழும் சில சினிமா ஒட்டுண்ணிகளும்தான் .
நான் கேட்கிறேன் ...
சமுதாயத்தைப் பற்றி துளி கூட அறிவு இல்லாமல், சமூக நீதி பற்றி எள்ளளவும் அறியாமல், சாதியை கொண்டாடிக் கொண்டு, பெண்களை ஒரு பொருளைப் போல் நடத்திக்கொண்டு, அவர்களை அசிங்கமாய்ச் சித்தரித்து கொண்டு, அறிவியல் எப்படி வேலை செய்யும் என்கிற மூளை இல்லாமல், ஹாலிவுட் படங்களை உரிமம் இல்லாமல் திருடிக்கொண்டு, தமிழ் சமுதாயத்தைப் பற்றி போலி பிம்பங்களை உருவாக்கி வைத்திருக்கும் தமிழ் சினிமாவிற்கு என்ன தகுதி இருக்கிறது ?
நான் இங்கே பாலச்சந்தரையோ, ஸ்ரீதரையோ, மகேந்திரனையோ, ராமையோ, கார்த்திக் சுப்பாராஜையோ இல்லை அவர்களை போல் சிறிதேனும் மூளையை உபயோகப்படுத்திப் படம் எடுக்கும் சினிமாக்காரர்களை கேட்கவில்லை. சினிமாவில் பெருபான்மையினராக இருக்கும் வியாபாரம் மட்டுமே நோக்காய், தமிழ் சினிமாவை வளரவிடாமல் இன்னும் பழமை பேசி திரியும் மக்களைக் கேட்கிறேன் .
உங்களுக்கு என்ன தகுதி இருந்தது மேல் சொன்ன விஷயங்களைச் செய்வதற்கு ,உங்கள் படங்களில் புகுத்தியதற்கு? லாஜிக் என்றால் என்னவென்று தெரியாமல் , அறிவியல் என்றால் என்னவென்று தெரியாமல், சமூதாய நிலை என்னவென்று தெரியாமல் படங்களை எடுப்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?
எந்த ஒரு தகுதியும் இல்லாமல் நீங்கள் படம் எடுக்கும்போது, வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி 153 ரூபாயில் படம் பார்க்கும் எந்த ஒரு எளியவனுக்கும் அந்த படத்தை விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. அப்படி இல்லையென்றால் அவர்களை நீங்கள் மனிதர்களாக மதிக்கவில்லை, வெறும் உங்கள் காலில் ஓரத்தில் ஓடிக் கொண்டிருக்கும் எறும்புகளாக நினைக்கிறீர்கள் என்றே அர்த்தம் .
உங்கள் படங்களைத் தகுதியானவர்கள் தான் விமர்சிக்க வேண்டும் என்றால், தயவு செய்து "adults only " போர்டை போல் ஏதாவது போர்டை மாட்டிவிட்டு படம் காட்டவும் .
- ஷாலின் மரிய லாரன்ஸ்