இரண்டு சிறுநீரகமும் பாதிப்பு.. திடீரென வந்த மாரடைப்பு.. மனோஜ் பாரதி ராஜாவிற்கு நடந்தது என்ன?
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ராஜாவின் திடீர் மரணம் ஒட்டுமொத்த திரைத்துறையினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 48 வயதில் அகால மரணமடைந்த மனோஜூக்கு என்ன ஆச்சு, திடீரென அவர் உயிரிழக்க என்ன காரணம் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
பல வெற்றிப்படங்களை கொடுத்த பாரதி ராஜா, தனது மகனை தாஜ்மகால் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து, இருந்தார். இன்று வரை அந்த படத்தின் பாடல் ரசிகர்களுக்கு பிடித்த பாடலாகவே உள்ளது. அறிமுகமான முதல் படத்திலேயே ''ஈய்ச்சி எலுமிச்சி ஏடி கருவாச்சி'' என்ற பாடலை பாடி பாடகராகவும் மாறினார்.

மனோஜ் பாரதிராஜா:அப்பாவைப்போல இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்ட மனோஜ், ப்ளஸ் டூ படிப்பை பாதியிலேயே விட்டுட்டு சினிமாவுக்கு வந்துவிட்டார். அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்ல, அவரோ, நீ எங்கிட்ட அசிஸ்டென்டா சேர்ந்தா அப்பா - மகன் உறவுதான் மேலோங்கும். தொழிலை கத்துக்கொள்ள முடியாது, நீ வேறு யாரிடமாவது உதவி இயக்குநராக வேலைபார் என்று சொல்லி, மணிரத்னத்திடம் சேர்த்துவிட்டார். அதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய 'பம்பாய்' படத்தில் மனோஜ் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதன் பின்அமெரிக்கா சென்ற தியேட்டர் ஆர்ட்ஸ் கோர்ஸ் படித்து முடித்தார்.
கடைசி படம்: தாஜ்மகால் படத்தை தொடர்ந்து சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்த போதும், அவரால் பெரிதாக பெயர் சொல்லும் அளவிற்கு ஒரு இடம் கிடைக்காததால், வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போனார் அதன் பிறகு தான் பல வருடம் கழித்து, வெங்கட்பிரபு இயக்கி மாநாடு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதைத்தொடர்ந்து கடைசியா கார்த்திக் நடித்த விருமன் படத்தில் நடித்திருந்தார். எப்படியாவது இயக்குநராக வேண்டும் என்பது என்னுடைய கனவு என கூறிவந்த மனோஜ், தன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கி இருந்தார்.

மனோஜூக்கு என்ன ஆச்சு: இந்நிலையில், மனோஜ் திடீரென நேற்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. திடீரென அவர் உயிரிழக்க என்ன காரணம் என்கிற தகவல் தற்போது தெரியவந்துள்ளது. இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு வந்ததை அடுத்து, கடந்த வாரம் இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது. ஆறு நாட்களுக்கு முன்பு தான் மனோஜ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார். இரண்டு சிறுநீரகமும் செயல் இழந்ததாலும், அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துக்காததாலும், அவர் நேற்று மாலை 6 மணி அளவில் சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழக முதல்வர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான திரு. மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. அன்பு மகனை இழந்து வாடும் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











