மீண்டும் கதை திருட்டில் சிக்கிய விஜய் படம்.. இம்முறை என்ன செய்யப் போகிறார் பாக்யராஜ்?
தளபதி 63 கதை திருட்டு விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இயக்குனர் கே.பாக்யராஜ்.
Recommended Video
சென்னை: விஜயை வைத்து அட்லி இயக்கி வரும் புதிய படம் தன்னுடைய கதை என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா உரிமை கோரியிருப்பது தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சர்கார் கதை திருட்டு பிரச்சினையில் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து, கடைசி வரை போராடி அவருக்கு நீதி கிடைக்க பெரிதும் போராடியவர் தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக பதவி வகித்து வரும் இயக்குநர் கே.பாக்யராஜ்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்வது வரை சென்றது அனைவரும் அறிந்தது தான்.

மீண்டும் கதை திருட்டு
இந்நிலையில், மீண்டும் விஜய் படம் கதை திருட்டில் சிக்கியுள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படக் கதை தன்னுடையது என நீதிமன்றம் வரை சென்றுள்ளார் குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா. இந்த விவகாரத்தில் தங்களால் எதுவும் செய்ய இயலாது என தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் கை விரித்து விட்டது. அதனால் தான் அவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

புகார் நிராகரிப்பு
காரணம் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்து ஆறு மாதம் ஆன உறுப்பினர்களின் கதை திருட்டு விவகாரம் பற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மனோஜ் குமார் தலைமையிலான குழு தெரிவித்து விட்டது. அதுதொடர்பாக அக்குழு கடிதமும் அளித்ததைத் தொடர்ந்தே செல்வா நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்.

ஏமாற்றமே மிச்சம்
இதனால், சர்கார் விவகாரம் போன்று இதிலும் பாக்யராஜ் அதிரடியாக ஏதாவது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என தன் குடும்ப உறுப்பினர்களைக் கூட பகைத்துக் கொண்டு செயல்பட்டவர் பாக்யராஜ். ஆனால், இந்த விவகாரத்தில் அவர் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதபடி சங்க விதிமுறைகள் அமைந்து விட்டன.

பாக்யராஜ் மீது எதிர்பார்ப்பு
ஆனால், புதிய மற்றும் சிறிய எழுத்தாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இது போன்ற கதை திருட்டு பிரச்சினைகள் எதிர்காலத்தில் ஏற்படாவண்ணம் தடுக்க பாக்யராஜ், நிச்சயம் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எழுத்தாளர்கள் மத்தியில் உள்ளது. பார்ப்போம், பாக்யராஜ் இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறார் என்று.


Click it and Unblock the Notifications











