மோடியை விளாசும் பிரகாஷ்ராஜுடன் செல்ஃபியா: மனைவி, மகளை திட்டி அழ வைத்த நபர்
சென்னை: பிரகாஷ்ராஜ் பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சிப்பதால் அவருடன் செல்ஃபி எடுத்த தனது மனைவி, மகளை ஒருவர் பொது இடத்தில் திட்டி அழ வைத்த சம்பவம் நடந்துள்ளது.
நடிகர் பிரகாஷ்ராஜ் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்கிற்கு சென்றுள்ளார். அங்கு உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்தார். அப்பொழுது நடந்த சம்பவம் குறித்து அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

செல்ஃபி
காஷ்மீர்..குல்மார்கில் உள்ள ஹோட்டலில் இருந்து வெளியே வந்தேன். அப்பொழுது ஒரு பெண் தன் மகளுடன் வந்து செல்ஃபி எடுத்துக் கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டார். நான் சரி என்றேன். அவர்களுக்கு ஒரே சந்தோஷம். ஆனால் திடீர் என்று அந்த பெண்ணின் கணவர் வந்து அவரை திட்டியதுடன், செல்ஃபியை நீக்குமாறு கூறினார். நான் மோடியை எதிர்த்து கேள்வி கேட்பதால் அப்படி செய்தாராம்.

கணவர்
அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் இதை பார்த்தனர். அந்த பெண்களுக்கும், மகளுக்கும் கண்ணீர் வந்துவிட்டது. இதையடுத்து நான் அந்த பெண்ணின் கணவரை தனியாக அழைத்துச் சென்று பேசினேன். டியர் சார்.. உங்கள் மனைவி உங்களை திருமணம் செய்ய மிஸ்டர் மோடி அல்லது நான் காரணம் இல்லை. அவர் உங்களின் கருத்தை மதிப்பது போன்று நீங்களும் தயவு செய்து அவரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுங்கள் என்றேன்.
பிரகாஷ்ராஜ்
நாந் பேசியதும் அந்த நபர் பதில் எதுவும் அளிக்காமல் அமைதியாக நின்றார். நான் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றேன். அவர் என் புகைப்படத்தை நீக்குகிறாரோ இல்லை ஆனால் அவர்களின் காயத்தை அவர் ஆற்றுவாரா என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் பிரகாஷ்ராஜ்.

மோடி
#justasking என்ற ஹேஷ்டேக் போட்டு பிரகாஷ்ராஜ் ட்விட்டரில் பிரதமர் மோடியிடம் நிறைய கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது பாஜகவினருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்நிலையில் தான் மோடி ஆதரவாளர் ஒருவர் பிரகாஷ்ராஜ் புகைப்படங்களை தனது மனைவி மற்றும் மகளை செல்போனில் இருந்து நீக்க வைத்துள்ளார். மோடி இரண்டாவது முறை பிரதமராகும் முன்பில் இருந்தே பிரகாஷ் ராஜ் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











