சிம்பு செய்த காரியத்தால் துள்ளிக் குதிக்கும் கவுதம் கார்த்திக்: வீடியோ இதோ
சென்னை: சிம்பு செய்த காரியத்தால் கவுதம் கார்த்திக் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சென்று தனது உடல் எடையை வெகுவாக குறைத்த சிம்பு நாடு திரும்பியதும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த படத்திற்காக தான் அவர் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாறினார்.

இந்நிலையில் அவர் மஃப்டி கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். மஃப்டி படத்தை இயக்கிய நார்தனே அதை தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்.
மஃப்டி படத்தில் சிம்பு தாதாவாகவும், கவுதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கிறார்கள். சிம்பு கருப்பு வேட்டி கட்டி கெத்தாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் சிம்பு தனது ரசிகரான கவுதம் கார்த்திக் மகிழும்படி ஒரு காரியம் செய்துள்ளார்.
அதாவது சிம்பு கவுதம் கார்த்திக்கிற்கு கூலிங் கிளாஸை பரிசளித்துள்ளார். மேலும் அந்த கிளாஸ் டப்பாவில் ஆட்டோகிராபும் போட்டுக் கொடுத்துள்ளார். அந்த சந்தோஷத்தை வீடியோவுடன் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார் கவுதம் கார்த்திக்.
கவுதம் கார்த்திக் ட்வீட்டை பார்த்த சிம்பு ரசிகர்கள் அந்த கூலிங் கிளாஸின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் மஃப்டி ரீமேக்கை பார்க்க காத்திருப்பதாகவும், சிம்புவின் லுக் மரண மாஸாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். கவுதம் கார்த்திக் திரையுலகில் மேன்மேலும் வளர சிம்பு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிம்பு பாவம் வம்பு தும்பு எதுவும் வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கிறார். இந்நிலையில் கவுதம் கார்த்திக் வெளியிட்ட வீடியோவை பார்த்த சில சேட்டைக்காரர்களோ, அடுத்த அண்ணன் சீமானின் வாரிசு கவுதம் கார்த்திக் வாழ்க, வருங்கால தமிழக முதல்வர் எஸ்.டி.ஆர். வாழ்க என்று குசும்பாக கமெண்ட் போட்டுள்ளனர்.
மஃப்டி ரீமேக் எல்லாம் இருக்கட்டும், மாநாடு படம் என்னாச்சுங்கண்ணா என்று ரசிகர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். மாநாடு படம் கைவிடப்பட்டதாக முன்பு பேச்சு கிளம்பியது. படம் கைவிடப்படவில்லை திட்டமிட்டபடி எடுக்கப்படும் என்று வெங்கட் பிரபு உறுதியளித்தார். அதனால் நிச்சயம் படத்தை எடுப்பார் என்று நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











