Mukund Vardarajan: சிவகார்த்திகேயனின் ’அமரன்’ கதை இதுதான்.. யாரு இந்த முகுந்த் வரதராஜன்?
சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள எஸ்கே 21 படத்துக்கு அமரன் என டைட்டில் வைத்துள்ளனர். தற்போது மிரட்டலாக டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.
சிவகார்த்திகேயன் அமரன் படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார். ராணுவ வீரராக நடிக்க தனது உடம்பை ஃபிட்டாக மாற்றி அதற்காக கடினமான வொர்க்கவுட் செய்து ராணுவ வீரனாகவே மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அப்படி முகுந்த் வரதராஜன் என்ன சாதனை செய்தார். அவரது பயோபிக்கை ராஜ்குமார் பெரியசாமி ஏன் கையில் எடுத்து இயக்கி இருக்கிறார் என்று அறிந்தால் கண்களில் கண்ணீரே வந்து விடும். முகுந்த் வரதராஜன் பற்றி அறியாத சில விஷயங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
31 வயதில் மரணம்: சென்னையில் உள்ள தாம்பரத்தில் 1983ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி பிறந்தவர் முகுந்த். அவரது அப்பா வரதராஜன் இந்திய விமானப்படையில் சேர ஆசைப்பட்டார். அவரது உறவினர்கள் பலர் IAFல் சேர்ந்தனர். ஆனால், வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் அவரது பெற்றோர்கள் அனுமதிக்கவில்லை. ஆனால், தனது ஒரே மகன் முகுந்த் ஆர்மியில் சேர விரும்புவதாக தெரிவித்த போது தந்தை தடை சொல்லவே இல்லை. ராணுவத்தில் சேர்ந்து 10 ஆண்டுகளில் மேஜராக மாறிய முகுந்த் கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி வீரமரணம் அடைந்தார்.

அசோக சக்ரா விருது: ராஜ்புத் ரெஜிமென்ட் எனும் ராணுவ கம்பெனியில் மேஜராக செயல்பட்டு வந்த முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சண்டை போட்டதில் 3 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்று விட்டு வீரமரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. உயிரிழந்த பின்னர் அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
கால் சென்டரில் வேலை பார்த்தார்: செய்னிக் பள்ளியில் படிப்பை முடித்த முகுந்த் அடுத்து கல்லூரி படிப்பையும் முடித்தார். அதன் பின்னர், சில மாதங்கள் கால் சென்டர் ஒன்றில் வேலை பார்க்க ஆரம்பித்தார். ராணுவத்தை தனது மகன் மறந்து விட்டான் என அப்பா நினைத்தார். ஆனால், அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக ராணுவத்திற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று 2004ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். அங்கே இவரது முனைப்பும் விடாமுயற்சியும் அடுத்த அடுத்த இடங்களுக்கு இவரை கூட்டிச் சென்றது.

10 நாளில் வரேன்னு சொன்னார்: ஏப்ரல் 12ம் தேதி முகுந்த் பிறந்தநாளுக்கு அவருடைய அப்பா வரதராஜன் ஹேப்பி பர்த்டே என மெசேஜ் செய்திருக்கிறார். 10 நாளில் வீட்டுக்கு திரும்பி வரேன் மனைவி இந்துவிடம் சொல்லாதீங்க என சொல்லியிருக்கிறார் முகுந்த். ஆனால், உயிரிழந்த நிலையில், அவரை சவப்பெட்டியில் வைத்து ராணுவ வீரர்கள் தூக்கிக் கொண்டு வருவார்கள் என நினைக்கவில்லை என கண்ணீர் சிந்தினார் தந்தை.

குழந்தையுடன் 6 மாதம் தான்: இந்து ரெபேக்கா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்த மேஜர் முகுந்த் தனது பெண் குழந்தையுடன் அதிகபட்சமாக 6 மாதங்கள் தான் செலவிட்டு இருப்பார் என்றும் முழுக்க முழுக்க இந்தியா மீதே ஆர்வம் கொண்டிருந்தான் என் மகன் என அவரது தந்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு ராணுவ வீரனின் கதையில் தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இந்த படத்தின் கிளைமேக்ஸில் நிச்சயம் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அழுதுக் கொண்டே தான் தியேட்டரை விட்டு வெளியே வருவார்கள் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











