தலைவன் யார் என்றே தெரியவில்லையே.. தங்கர் வேதனை
பெங்களூர்: தமிழர்களின் உண்மையான தலைவன் யார் என்றே தெரியவில்லை. இந்த நிலையில் எப்படி நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று தெரியவில்லை என்று இயக்குநர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
கர்நாடகத் தமிழ்க் குடும்பங்களின் கூட்டமைப்பு சார்பில் பெங்ளூரில் தமிழர் கன்னடர் ஒற்றுமை மாநாடு நடந்தது.
அதில் கலந்து கொண்டு தங்கர் பச்சான் பேசினார்.

தமிழகத்தில் தமிழர்கள் இல்லையே
அப்போது அவர் கூறுகையில், மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்ட தமிழ்நாடு மாநிலத்தில் தமிழர்கள் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. 10 நிமிடங்கள் சரளமாக தமிழ் பேசும் நிலையில் தமிழர்கள் இல்லை.

போதிய தமிழ்ப் பள்ளிகள் இல்லை
1.10 கோடி தமிழ்க் குழந்தைகள் படிக்கும் தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் தமிழ்ப் பள்ளிகள் இல்லை.

புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள்
ஆனால் பிரான்ஸ் நாட்டில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் 472 தமிழ்ப்பள்ளிகளை நடத்திவருகிறார்கள்.

தாய் மொழியை மறக்கக் கூடாது
உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் தமிழ்மொழியை மறக்கக்கூடாது. நமது மொழி தான் தமிழர்களின் அடையாளமாகும்.

மொழிப் பாசம்
கர்நாடகத்தில் வாழ்ந்துவரும் தமிழர்கள் தமிழ்மொழி மீது தீராத அன்பும், பற்றும் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.

கன்னடர்கள் காரணம் இல்லை
ஆனால் இங்குள்ள தமிழ்ப்பள்ளிகள் மூடப்படுவதற்கு கன்னடர்களோ, கர்நாடக அரசோ அல்ல, கர்நாடக தமிழர்கள் தான் காரணம்.

நாம் அனுப்பினால்தானே
நமது குழந்தைகளை தமிழ் கற்க அனுப்பினால் தானே தமிழ்ப்பள்ளிகளை நடத்த முடியும் என்ற நிதர்சனத்தை தமிழர்கள் உணர வேண்டும். தாய்மொழியில் கற்று தேர்ந்தவர்கள் தான் உலகம்போற்றும் சாதனையாளர்களாக மிளிர்கிறார்கள்.

தமிழக அரசியலில் தமிழர் அல்லாதோர்
தமிழக அரசியலில் 25 சதம்பேர் தமிழர்கள் அல்லாதவர்கள் கோலோச்சுகிறார்கள். சாதி, மதங்களால் பிளவுப்பட்டிருப்பதே இதற்கு காரணம். கர்நாடக அரசியலில் தமிழர்களால் மிளிரமுடியாமைக்கும் கர்நாடக தமிழர்கள்தான் காரணம்.

தலைவன் யார் என்றே தெரியவில்லையே
நமது தலைவன் யார் என்று தெரியாமல் அரசியல் உரிமைகளை எப்படி வென்றெடுக்க முடியும்? இதில் கன்னடர்களை குறைக்கூறுவதை விடுத்து, கர்நாடகத்தில் உள்ள கட்சிகளில் இணைந்து தமிழர்கள் பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தமிழர்கள் நாளடைவில் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











