நீக்கினார் மகன், தலைவராக்கினார் அப்பா.. இவர்தான் ஏஸ்.ஏ.சியின், விஜய் மக்கள் இயக்க தலைவர்!
சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு இருப்பவர், இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாக நேற்று செய்தி பரவியது.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி பெயரை, தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.

அரசியல் கட்சி
இதை விஜய் தரப்பு மறுத்தது. அதேநேரம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி இயக்கத்திற்கு விண்ணபிக்கப்பட்டிருப்பது உண்மை என்று கூறப்பட்டது. இதுதொடர்பாக விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர், விளக்கம் அளித்தார்.

இது என் முயற்சி
அதில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு, நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என் முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல என்று கூறினார். இதனிடையே அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

தொடா்பு இல்லை
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், என் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார் என்பதை அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடா்பு இல்லை. எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளார் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

தகுந்த நடவடிக்கை
அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

தலைவர் பத்மநாபன்
இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சியின் தலைவராக பத்மநாபன் என்பவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் யார் என்று இப்போது தெரியவந்துள்ளது. இவர் திருச்சியை சேர்ந்தவர். பத்மநாபன் என்ற ராஜாவான இவர், தொடக்க காலத்தில் விஜய் ரசிகர் மன்றத்தை திருச்சியில் நிர்வகித்து வந்தவர்.

திடீர் நீக்கம்
மாவட்டத் தலைவராக இருந்த இவர், எஸ்.ஏ.சியுடன் நெருக்கமாக இருந்தார். இவரை சமீபத்தில் நடிகர் விஜய், மன்ற பொறுப்பில் இருந்து நீக்கினார். இருந்தாலும் எஸ்.ஏ.சியுடன் தொடர்பில் இருந்த அவர், விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற பெரும் பங்காற்றி வந்தாராம்.

அவரிடம் கேளுங்கள்
இந்த அரசியல் கட்சி பற்றி கேட்டபோது, எதுவாக இருந்தாலும் எஸ்.ஏ.சியிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்கிறார் பத்மநாபன். நடிகர் விஜய், தனது இயக்கத்தில் இருந்து நீக்கிய ஒருவரை அப்பா தலைவராக்கியது ரசிகர் மன்றத்தினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











