ராக்கெட்ரி படத்தின் நிஜ நாயகன் நம்பி நாராயணன் யார்?..துரோகத்தால் வீழ்த்தப்பட்ட விஞ்ஞானி
ராக்கெட்ரி படத்தில் மாதவன் ஏற்றுள்ள பாத்திரம் நம்பிநாராயணன் என்கிற விஞ்ஞானியின் உண்மைக்கதையாகும். துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கலாமின் சிஷ்யர் பற்றி பார்ப்போம்.
Recommended Video
இன்று முதல் மாதவன் இயக்கத்தில் ராக்கெட்ரி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் உண்மைச் சம்பபவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப்படத்தில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு விஞ்ஞானியின் கதை ஆகும்.
நம்பி நாராயணன் ராக்கெட் தொழில் நுட்பத்தின் முன்னோடி, ஏவுகணை, திரவ எரிபொருள் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கு வகித்தவர்.

இந்திய ராக்கெட் தொழில் நுட்பம்
இந்தியாவின் ராக்கெட் தொழில் நுட்பம் 1950 களில் விரைவுப்படுத்தப்பட்டது. அந்த காலக்கட்டத்தின் முயற்சியின் பலன் 1970 களில் இந்தியா சோவியத் யூனியன் உதவியுடன் பல முயற்சிகளில் வெற்றி பெற்றது. இது தவிர இஸ்ரோ விஞ்ஞானிகளின் பங்கும் அளப்பரியதாக இருந்தது. ராக்கெட் தொழில் நுட்பத்தில், ஏவுகணை உற்பத்தியில் புதிய சாதனைகள் பல செய்ததில் கலாமுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. உலகில் முன்னேறிய நாடுகளுக்கு இணையாக இன்று இந்தியா ராக்கெட், ஏவுகணை தொழில் நுட்பத்தில் முன்னணியில் உள்ளது என்றால் அதில் கலாம் பங்கும், இஸ்ரோ விஞ்ஞானிகளின் குழுவின் பங்கும் உண்டு. இதி கலாம் காலத்தில் அவரது குழுவில் இருந்தவர்களில் முக்கியமானவர் நம்பி நாராயணன்.

பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, கிரியோஜெனிக் விஞ்ஞானி
1970 களின் ஆரம்ப காலத்தில் அப்துல் கலாம் குழுவில் பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணன் இஸ்ரோவில் பிஎஸ்எல்வி 2, 4 ஆம் நிலை, கிரியோஜெனிக் திட்ட இயக்குநர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-யின் அசோசியேட் திட்ட இயக்குநர், திரவ எரிபொருள் புரோபல்ஷன் துணை திட்ட இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர்.விஞ்ஞானி மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அதிகாரியாக பணியாற்றினார்.

திரவ எரிபொருள் முன்னோடி
ஏவுகணை வாகனத் திரவ எரிபொருள் நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். திரவ எரிபொருள் இயந்திரங்களின் எதிர்காலத் தேவையை முன்கூட்டியே உணர்ந்திருந்த நம்பி நாராயணன் இஸ்ரோவின் தலைவர் சதீஷ் தவான், யு. ஆர். ராவ் ஆகியோரின் வழிகாட்டுதலுடன், 600 கிலோ அழுத்தம் கொண்ட முதல் திரவ உந்து வாகனத்தை 1970 களில் வெற்றிகரமாக உருவாக்கினார்.

தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது
அதன் பின்னர் இஸ்ரோவில் நம்பி நாராயணன் பங்கு மிக அதிகமாக இருந்தது. இந்நிலையில் தான் அவர்மீது மிகப்பெரிய குற்றச் சாட்டு விழுந்தது. 1994 ஆம் ஆண்டு நம்பி நாராயணன் விண்வெளி திட்ட ரகசியங்களை வெளிநாடுகளுக்கு விற்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், கேரள போலீஸார் நம்பி நாராயணனைக் கைது செய்தனர். ஆனால் அவர் குற்றமற்றவர் என குரல் எழுந்தது. வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதில் எந்தவித உளவு சதியும் இல்லை, தவறாக வழக்கு தொடர்ந்த போலீஸார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

4 ஆண்டுகள் சட்டப்போராட்டம் மூலம் நியாயம் பெற்ற நம்பி நாராயணன்
விசாரணை சிறைவாசம் என 4 ஆண்டுகள் ஓடிவிட்டிருந்தது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஆனால் அந்த நான்கு ஆண்டுகளில் மிகப்பெரிய தேச விரோதிபோல் இந்திய ஊடகங்கள் நம்பி நாராயணன் பற்றி எழுதின, அவருக்கு வேலயும் பறிபோய் அவரும் அவரது குடும்பத்தாரும் மிகப்பெரிய அவமானத்துக்குள்ளாக்கப்பட்டனர். தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கேட்டு நம்பி நாராயணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடுத்தார்.

மிகப்பெரிய நஷ்ட ஈடை வழங்கிய கேரள அரசு
தன்னை கைது செய்த கேரள போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை கோரி நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்தார். பின்னர் அவருக்குக் கூடுதலாக ரூ.1 கோடியே 30 லட்சம் இழப்பீடு வழங்கியது கேரள அரசு.

நம்பி நாராயணன் பற்றி பதிவு செய்த ஜனகனமண படம்
இதன் பிறகு மீண்டும் இஸ்ரோவில் பணியமர்த்தப்பட்ட நம்பி நாராயணன் முன்புபோல் வேகமாக செயல்பட முடியவில்லை. அவர் மீதான தவறான புகார் சிறைவாசம் அவர் பணிகளில் அவரை முடக்கியது. பணியில் இணைந்து 3 ஆண்டுகளில் (2001) அவர் ஓய்வுப்பெற்றார். நம்பிநாராயணனை தவறான குற்றச்சாட்டில் கைது செய்து சிறையில் அடைத்ததும், போலீஸ் சொன்னதை ஊடகங்கள் உண்மை என செய்தி வெளியிட்டதையும், கலாம் அளவுக்கு வரவேண்டியவர் முடக்கப்பட்டார் என ஜனகனமண படத்தில் ப்ரித்விராஜ் ஆவேசமாக வசனம் பேசுவார்.

அமெரிக்க விஞ்ஞானி வாய்ப்பை 1970 களிலேயே மறுத்தவர் நம்பி நாராயணன்
நம்பி நாராயணன் அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் அவருக்கு ஃபெல்லோஷிப் கிடைத்தது உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி சார்ந்த படிப்பை முடித்தார். அமெரிக்காவில் குடியுரிமையுடன் கூடிய வேலை வாய்ப்பும், நல்ல சம்பளமும் அவரை தேடி வந்தும் அதை எல்லாம் மறுத்து இந்தியாவில் பணியாற்ற வந்தவர் நம்பி நாராயணன். 1970 களில் இந்தியா அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஒன்றுமே இல்லை, அப்படிப்பட்ட காலக்கட்டத்தில் இந்தியாவுக்காக பணியில் இணைந்த நம்பி நாராயணனுக்கு கிடைத்தது அவமானம்.

பத்ம பூஷன் மூலம் மீண்டும் கவுரவம்
2019 ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட அவமானத்தை துடைத்தெரியும் வகையில் பத்ம பூஷன் பட்டத்தை இந்திய அரசு வழங்கியது. தனது பணிகளுக்கு கிடைத்த அங்கிகாரமாக இதை கருதுவதாக நம்பிநாராயணன் தெரிவித்துள்ளார். வாழும் விஞ்ஞானி நம்பிநாராயணன் வாழ்க்கை துயரத்தை ராக்கெட்ரி படமாக வடித்துள்ளார் மாதவன். இந்தப்படம் கேன்ஸ் பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











