மூளைச்சாவடைந்த நடிகர் சஞ்சரி விஜய்யின் உறுப்புகள் உடனடியாக தானம் செய்யப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்!
சென்னை: மூளைச் சாவடைந்த இளம் நடிகர் விஜய் சஞ்சரியின் உடல் உறுப்புகள் உடனடியாக தானம் செய்யப்பட்டது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட நடிகரான சஞ்சரி விஜய் கடந்த சனிக்கிழமை தனது நண்பர் நவீனுடன் இருசக்கர வாகனத்தில் மருந்து வாங்க சென்றார்.
மருந்து வாங்கி விட்டு திரும்பும்போது சஞ்சரி விஜய் விபத்தில் சிக்கினார்.

ஐசியூவில் தீவிர சிகிச்சை
சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சஞ்சரி விஜய்க்கு தலையில் பலத்த காயமடைந்தது. அவரது நண்பர் நவீனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

மூளையில் ரத்தக்கசிவு
தலையில் பலத்த காயமடைந்த சஞ்சரி விஜய் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐசியூவில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் சஞ்சரி விஜய்க்கு அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று மூளைச்சாவு
இந்நிலையில் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு மற்றும் ரத்தப் போக்கு காரணமாக கடந்த 2 நாட்களாக ஆபத்தான நிலையில் இருந்தார் சஞ்சரி விஜய். இந்நிலையில் சஞ்சரி விஜய்க்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் நேற்று மதியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இறக்கும் முன்பே
இதனை தொடர்ந்து சஞ்சரி விஜய்யின் உறுப்புகளை உடனடியாக தானம் செய்து விட்டு அவரது உடலை பெற்றுக்கொள்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். நடிகர் சஞ்சரி விஜய் இறப்பதற்கு முன்பாகவே அவரது குடும்பத்தினர் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

சாத்தியக் கூறுகள் குறைவு
இந்நிலையில் இதுகுறித்து அவரது சகோதரரான சித்தேஷ் விளக்கம் அளித்துள்ளார். அதாவது சஞ்சரி விஜய்யின் மூளைத்தண்டு செயல்படவில்லை என்றும் அவர் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்றும் மருத்துவர்கள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.

இறந்துவிட்டால் முடியாது
விஜய்யின் நினைவை மதிக்கும் பொருட்டு, அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பம் முடிவு செய்துள்ளது. மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, அடுத்த 8-12 மணி நேரத்தில் அவர் இறந்துவிட்டால், அவருடைய உறுப்புகளை கூட தானம் செய்ய முடியாது.

மீளாத் துயர்
அவர் இறந்த பிறகும் அவர் சமூகத்திற்கு தனது சேவையைத் தொடரட்டும். அதனால் அவருடைய உறுப்புகளை தானம் செய்கிறோம் என தெரிவித்துள்ளார். 38 வயதே ஆன இளம் நடிகரான சஞ்சரி விஜய்யின் மரணம் ஒட்டு மொத்த சினிமாத் துறையையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

சொந்த ஊரில் இறுதிமரியாதை
அவரது உடல் பெங்களூருவில் உள்ள ரவீந்த்ரா கலாக்ஷேத்ராவில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான பஞ்சனஹள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் இரங்கல்
தேசிய விருது பெற்ற நடிகரான சஞ்சரி விஜய்யின் உடல் முழு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் சஞ்சரி விஜய்யின் மறைவுக்கு அம்மாநில முதல்வர் பிஎஸ் எடியூரப்பா இரங்கல் தெரிவித்துள்ளார். உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினருக்கும் எடியூரப்பா நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











