அர்னால்ட் ஏன் கோவிச்சிக்கிட்டு பாதியில் போனார் தெரியுமா? - இது ஆஸ்காரின் விளக்கம்
ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாடலை வெளியிடாமல் பாதியிலேயே அர்னால்ட் கிளம்பிப் போனதற்கு புது காரணத்தைச் சொல்ல ஆரம்பித்துள்ளனர் ஆஸ்கார் பிலிம்ஸ் தரப்பில்.
அர்னால்ட் கிளம்பியதற்குக் காரணம் அந்த பாடி பில்டர்கள்தான் என்று ஆஸ்கார் ரவியே குற்றம்சாட்டியுள்ளார்.

அப்படி என்ன செய்துவிட்டார்கள் பாடி பில்டர்கள்?
அந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த பாடி பில்டர்களின் ஷோ நடந்தது. அதில் ஷங்கர் படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கேற்ப உடம்பை ஆட்டியும், குதித்தும், வளைத்து நெளித்தும் ஷோ காட்டினர்.
தானும் ஒரு பாடி பில்டர் என்பதால் இதை அர்னால்ட் வெகுவாக ரசித்தார். அத்தோடு நிற்கவில்லை அந்த பாடி பில்டர்கள். மேடையிலிருந்து வரிசையாக இறங்கியவர்கள், அர்னால்ட் அமர்ந்திருந்த இடத்துக்கு வெகு அருகில் வந்து ஒருவன் பின் ஒருவராக குனிந்து, உட்கார்ந்தபடி அர்னால்டுக்கு மரியாதை செய்தனர். அதைப் புரிந்து கொண்டு, இருக்கையிலிருந்து எழுந்து வந்த அர்னால்ட், ஒவ்வொரு பாடி பில்டர் தலையையும் தொட்டு வாழ்த்தினார்.

முத்தமிட்டும் காலில் விழுந்து...
இத்தோடு விடவில்லை... ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு பாடி பில்டரும் அர்னால்டை நெருங்கி, அவர் கையைப் பிடித்து முத்தமிட்டும் காலில் விழுந்தும் தங்கள் அன்பை கொஞ்சம் ஓவராகக் காட்டினார்.
ஏற்கெனவே 3 மணி நேரம் வெட்டியாகக் காத்திருந்த அர்னால்ட், இந்த நிகழ்ச்சியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அந்த பாடி பில்டர்களோடு மேடையேறிவிட்டார். அப்போது கையில் எழுதி வைத்திருந்த குறிப்புகளுடன்தான் போனார். மேடையில் விரிவாகப் பேசி, சென்னை மக்களிடமிருந்து விடை பெற்றுச் செல்ல வேண்டும் என்பதே அவர் எண்ணமாக இருந்தது. அதை நேரடியாகவும் பார்க்க முடிந்தது.

சொதப்பல் திலகங்கள் சின்மயி-பாபி சிம்ஹா:
ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளாத சொதப்பல் திலகங்களான தொகுப்பாளர்கள் சின்மயியும் பாபி சிம்ஹாவும் மேடையில் அத்தனை அநாகரீகமாக நடந்து கொண்டனர். பாபி சிம்ஹா அர்னால்டிடமிருந்து மைக்கப் பிடுங்கி, தோளைப் பிடித்து இழுத்து, அவர் காதில் நீங்கள் பேச வேண்டிய நேரம் இதுவல்ல.. நான் அழைத்ததும் வந்து பேசுங்கள் என்று கூற, 'இல்லை.. நான் என் பாணியில் பேசுகிறேன்,' என்று கூறிவிட்டு, எழுதி வைத்திருந்ததை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு சில வரிகள் பேசிவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார்.
இது மிகப் பெரிய அளவில் நிகழ்ச்சியை பாதித்துவிட்டது. பலரது கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. இவ்வளவு செலவு செய்து, பிரமாண்டம் காட்டியும் அத்தனையும் அவமானச் சின்னமாகிவிட்டதே என்ற விரக்திக்குள்ளாகிவிட்டார் தயாரிப்பாளர்.

ஆஸ்கார் ரவிச்சந்திரன் சார்பில் ஒரு விளக்கம்...
சரி, அர்னால்ட் ஏன் கோபித்துக் கொண்டு போனார்? இதற்கு ஒரு விளக்கம் சொல்ல வேண்டுமே. அதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சார்பில் ஒரு விளக்கம் வெளியாகியுள்ளது.
எண்ணைய் தடவிய உடம்பில் வேர்வை வழிய வந்த பாடி பில்டர்கள் அர்னால்டை கட்டிப் பிடித்தும், கையில் முத்தமிட்டும் ஆர்வக் கோளாறு பண்ணியதால், அவரது உடை அழுக்காகி, அவர் கைகளிலும் எண்ணெய் பிசுக்கு ஒட்டிக் கொண்டது. அதனால்தான் அர்னால்ட் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டார் என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்ல ஆரம்பித்துள்ளது.
தனக்கு மரியாதை செலுத்திய பாடி பில்டர்களை மேடைக்கு கூட்டிப் போய், ஒழுங்காக அவர்களை நிற்கை வைத்து அவர்களின் தோளில் கைபோட்டு போட்டோ எடுத்துக் கொண்டவர் அர்னால்ட். அவர் போய் இந்த அற்ப காரணத்துக்காக பாதியில் வெளியேறுவாரா?

சகிக்க முடியாமல் அவர் கிளம்பிப் போனார் என்பதே உண்மை...
எந்த முன்னேற்பாடும் இல்லாமல், சரியான நேரத்துக்குத் தொடங்காமல் நிகழ்ச்சியை சொதப்பிக் கொண்டிருந்ததைச் சகிக்க முடியாமல் அவர் கிளம்பிப் போனார் என்பதே உண்மை. அவர் கொடுத்த 2 மணி நேரத்துக்குள் அவரை சரியாகப் பயன்படுத்தத் தெரியவில்லை நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு. நேரம் தவறுவது என்பது நமக்கெல்லாம் ஒரு விஷயமே அல்ல. ஆனால் அமெரிக்கர்களுக்கு நேரந்தவறாமை என்பது மிக முக்கியம். அர்னால்டை அழைக்கும் முன் இந்த அடிப்படை உண்மையைத் தெரிந்திருக்க வேண்டாமா?

இந்த அளவு அவமானம் நேர்ந்திருக்காது...
முன்பு ஜாக்கி சான் கலந்து கொண்ட தசாவதாரம் விழா, சரியான நேரத்துக்கு ஆரம்பித்து, முடிந்தது. காரணம் அதில் ஜாக்கி சான் மட்டும் கலந்து கொள்ளவில்லை. அன்றைய முதல்வர் கருணாநிதியும் பங்கேற்றார். முதல்வரின் நிகழ்ச்சி என்பதால் நேர விரயம் ஆகாமல் சரியான நேரத்துக்கு நடந்து முடிந்தது. அந்த அளவுக்கு நடந்திருந்தால் கூட இந்த அளவு அவமானம் நேர்ந்திருக்காது!


Click it and Unblock the Notifications











