ஏவிஎம் சரவணனின் ஒயிட்&ஒயிட் ரகசியம் தெரியுமா?.. இதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?
சென்னை: ஏவிஎம் நிறுவனர் மெய்யப்ப செட்டியாரின் மகன் ஏவிஎம் சரவணன் இன்று வயது மூப்பு காரணமாகவும், உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக ஏவிஎம் ஸ்டூடியோவில் வைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் அவரது உயிரிழப்பால் சோகத்தில் மூழ்கியுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் அடையாளமாக திகழ்வது ஏவிஎம் நிறுவனம். கடந்த 1945ஆம் ஆண்டு ஏவி மெய்யப்ப செட்டியாரால் தொடங்கப்பட்ட அந்த நிறுவனம் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருக்கிறது. அதன் வாசலில் இருக்கும் உலக உருண்டை பலருக்கு தெம்பை கொடுத்து சினிமாவில் வெல்ல வைத்திருக்கிறது. சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்டோர் எல்லாம் வளர்வதற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது.
ஏவிஎம் சரவணன்: மெய்யப்ப செட்டியாரின் மறைவுக்கு பிறகு ஸ்டூடியோவை பார்க்கும் பொறுப்புக்கு வந்த சரவணன் அடிப்படையில் கதை அறிவு அதிகம் உள்ளவர். முதலில் அந்த நிறுவனத்தின் கதை இலாகா பிரிவில் பணியாற்றி. அவர் கதையில் சொல்லும் மாற்றங்கள் எல்லாம் சரியாக இருந்து ஹிட்டான படங்கள் ஏராளம். சிவாஜி, எம்ஜிஆருக்கு மெய்யப்ப செட்டியார் நெருக்கமாக இருந்தாரோ அதேபோல் அடுத்த தலைமுறை நடிகர்கள் ரஜினி, கமலுக்கு சரவணன் நெருக்கமாக இருந்தார்.

அனைவரும் மரியாதை: சரவணன் மீது திரைத்துறையினர் அனைவருக்குமே மரியாதை இருக்கிறது. எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பி பாதுகாத்தாலும்; மற்றவர்களிடம் ரொம்பவே எளிமையாக பழகும் குணம்தான் அவரது இந்த வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் காரணமாக கருதப்படுகிறது. அண்மை காலமாக ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டது. ஸ்டூடியோவில் ஒரு தளத்தை பழைய பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
உயிரிழந்த சரவணன்: அனைத்து பணிகளில் இருந்தும் முழுக்க முழுக்க ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார் சரவணன். 86 வயதான அவருக்கு கடந்த சில நாட்களாகவே வயது மூப்பு காரணமாக உடல்நலத்தில் சில பிரச்னைகள் வந்ததாக தெரிகிறது. மருத்துவர்களும் முடிந்த அளவு அவருக்கு சிகிச்சை கொடுத்தார்கள். ஆனால் அந்த சிகிச்சையை அவரது உடல் ஏற்றுக்கொள்ளும் நிலையை கடந்ததால் இன்று உயிரிழந்தார். இன்று மாலை 3.30 மணி வரை அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஏவிஎம்மில் வைக்கப்பட்டிருக்கிறது.
ஒயிட்&ஒயிட் ரகசியம்: சரவணன் என்றாலே அவரது ஒயிட்&ஒயிட் காஸ்ட்யூமும் அனைவரது நினைவுக்கும் வரும். இந்நிலையில் அவர் ஏன் அந்த உடையை பயன்படுத்தினார் என்பது குறித்து பார்க்கலாம். அதாவது சரவணனோடு பிறந்தவர்கள் மொத்தம் மூன்று பேர். அவர்களது தாய் நான்கு பேருக்கும் சிறு வயதில் கலர் உடைகளைத்தான் எடுத்து தைத்து கொடுத்தாராம். எல்லோரும் ஒவ்வொரு கலர் ட்ரெஸ்ஸை போட்டுக்கொள்ள; இவர் சிறு வயதிலிருந்தே வெள்ளை நிற உடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தாராம். அதை தவிர்த்து மிகப்பெரிய காரணம் எல்லாம் ஒன்றும் இல்லையாம். அதேசமயம் வெளியூர் ஷூட்டிங் செல்லும்போதெல்லாம் கலர் பேண்ட்டைதான் அணிவாராம்.


Click it and Unblock the Notifications











