கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை முடக்காதது ஏன்? - பாக்யராஜ் விளக்கம்

சந்தானம் கதாநாயகனாக நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா. இந்த படம், கே பாக்யராஜ் எழுதி, இயக்கி நடித்து பெரும் வெற்றி பெற்ற இன்று போய் நாளை வா படத்தின் அப்பட்டமான காப்பி ஆகும்.
இதற்கு கண்டனம் தெரிவித்த பாக்யராஜ், தனக்கு நஷ்டஈடாக ரூ 2 கோடி தரவேண்டும் என்றுகோரி வழக்குப்பதிவு செய்தார். ஆனால் படத்துக்கு அவர் தடை கோரவில்லை. படமும் வெளியாகிவிட்டது.
பாக்யராஜின் அனுமதியின்றி அந்தக் கதையைக் காப்பியடித்து படமெடுத்தது மட்டுமின்றி, இப்போது அந்தக் கதையே தன் சிந்தனையில் உதித்த சொந்தக் கதை என்று அடாவடியாக பொய் கூறி வருகிறார் சந்தானம்.
இந்த நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த பாக்யராஜ் கூறுகையில், "நான் நடித்து, இயக்கிய வேட்டிய மடிச்சு கட்டு படம் ஒருநாள் காலதாமதமாக திரைக்கு வந்ததால், பல சோதனைகளை சந்தித்தேன். அன்று நான் கண்ணீர்விட்டு அழுதேன்.
அதுபோன்ற ஒருநிலை எதிரிக்கு கூட வரக்கூடாது என்று நினைத்தேன். அதனால்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தை திரைக்கு வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் நான் ஈடுபடவில்லை.
ராம நாராயணனும், சந்தானமும் தெரிந்தவர்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் டைட்டிலில் என் பெயரை போடவேண்டும் என்றும், அந்த படத்தின் வசூல் விவரத்தை எனக்கு அனுப்பவேண்டும் என்றும் புகார் மனுவில் கூறியிருந்தேன்.
இந்த நிலையில், கண்ணா லட்டு தின்ன ஆசையா படப்பிடிப்பு நடந்தபோது, சந்தானம் தினமும் என்னை சந்தித்ததாகவும், தினமும் என்னென்ன காட்சி படமாக்கினார்கள் என்று எனக்கு விளக்கியதாகவும் ஒரு வதந்தி பரவியிருக்கிறது. சந்தானத்தை மாப்பிள்ளை விநாயகர் என்ற படபூஜையின்போது ஒரே ஒருமுறைதான் சந்தித்தேன். அதன்பிறகு அவரை, நான் பார்த்ததே இல்லை.
இந்த பிரச்சனையில் உதயநிதி ஸ்டாலின் தலையிட்டு, என்னை சமாதானப்படுத்தியதாகவும், நான் பெரிய தொகையை வாங்கிக்கொண்டதாகவும் இன்னொரு வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். தமிழ் படஉலகில், எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.
எனக்கு ஏற்பட்ட பாதிப்பு, எதிர்காலத்தில் மற்றவர்களுக்குக்கூட நடக்கலாம். அதற்காகவே நான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறேன்.
இந்த பிரச்சினை தொடர்பாக புஷ்பா கந்தசாமி, என் மனைவி பூர்ணிமாவை 2 முறை சந்தித்து பேசினார். பிரச்சனையை பெரிதுபடுத்தவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அதை அவரே இப்போது மறுக்கிறார்.
சந்தானம் அளித்த ஒரு பேட்டியில் இது, இன்று போய் நாளை வா படத்தின் கதைதான் என்று கூறியிருந்தார். இப்போது, என் சிந்தனையில் உதித்த கதை என்று மனசார பொய் சொல்கிறார்," என்றார்.


Click it and Unblock the Notifications











