Bharathiraja: பாரதிராஜா ஏன் இயக்குநர் இமயம்? இப்படியான படங்களை கொடுத்தவரை மெச்சாமல் இருப்பாங்களா?
சென்னை: ஜூன் மாதம் என்றால் தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மனதில் நினைப்பது, கலைஞர் கருணாநிதி, இசைஞானி இளையராஜா, இயக்குநர் மணிரத்னம், பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியன் உள்ளிட்ட தமிழ் திரையுலகில் கோலோச்சியவர்கள் பிறந்த நாட்கள் அடுத்தடுத்து வருகிறது என்பது தான். இப்படி இருக்கையில் யாரும் எதிர்பார்க்காத சூழலில் ஜூன் 10ஆம் தேதியை தனதாக்கிக் கொண்டு, மொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டு விடை பெற்றிருக்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா.
தமிழ் சினிமாவில் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரால் பொது வெளிகளில் ஒருவரை இயக்குநர் என்று அழைக்கப்பட்டவர் என்றால் அது இயக்குநர் இமயம் க. பாரதிராஜாவைத்தான். தமிழ் சினிமா இயக்குநர்களில் முன்னோடி, இன்றைய தமிழ் சினிமாவை 50 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டமைத்தவர் கே. பாலச்சந்தர். அவர் தங்களது பெயரை நினைவில் வைத்துக் கொண்டாலே அங்கீகாரம் என்று கருதிக் கொண்டு இருந்த திரையுலகினர் மத்தியில், டைரக்டர் வந்துட்டாராப்பா என்று கே. பாலச்சந்திரால் அழைக்கப்பட்ட ஒரே இயக்குநர் இயக்குநர் இமயம்.
தமிழ்நாடு அரசு விருது, தேசிய விருது, பத்ம ஸ்ரீ என இவர் சந்திக்காத அங்கீகாரம் கிடையாது. இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் பலவும் சமூக கருத்துக்களை தாங்கி வந்தவை. மேலும் ரத்தமும் சதையுமான யதார்த்த கதைக்களத்தை கொண்டவை. 40க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கி இருந்தாலும், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஐந்து படங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

16 வயதினிலே: படத்தின் கதை, திரைக்கதை என எல்லாமே ஒரு வெற்றிப் படத்திற்கான தகுதியைக் கொண்டிருந்தாலும், தனது முதல் படத்திலேயே அன்றைய ஜாம்பவான்கள் செய்யாததைச் செய்து, வெற்றி கண்டவர். ஸ்டூடியோக்களுக்குள் முட்டி மோதிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை கையைப் பிடித்து இங்கு வந்து நதியில் குளி, தென்றலை அனுபவி, புதுக்காற்றை சுவாசி, சூரிய வெளிச்சம் இப்படித்தான் இருக்கும்.. இன்னும் கொஞ்சம் நேரம் போனால் அந்த வெளிச்சமே சுடும் என்று சுதந்திர பாதையை வகுத்துக் கொடுத்தவர் பாரதிராஜா தனது ஆனா, ஆவன்னாவை மட்டுமல்ல தமிழ் சினிமாவுக்கும் சேர்த்து எழுதிய படம் 16 வயதினிலே.

கிழக்கே போகும் ரயில்: 16 வயதினிலே வெளியான அதே 1977ஆம் ஆண்டிலேயே இந்த படமும் வெளியாகிறது. படமும் ஹிட். புதுமுகங்களை கொண்டு பிரமாண்டமான வெற்றியைக் கொடுத்து விட்டார். ஆனால் கூடவே ஒரு முத்திரையும் விழுந்தது, " இந்தாளு கிராமத்தான்.. கிராமத்து கதையைத் தான் இயக்கத் தெரியும்.. சரி, இவரும் ஒரு சீசன் இயக்குநர், நாளு அஞ்சு படத்துக்கு அப்புறம் ஆளே இருக்கமாட்டான்" என்ற விமர்சனங்களை வண்டி வண்டியாக அள்ளிக் கொண்டு வந்து மலைபோல பாரதிராஜாவின் காலுக்கு அடியில் கொட்டியது.

சிகப்பு ரோஜாக்கள்: மலைபோல் குவிக்கப்பட்ட அந்த விமர்சனங்களுக்கு மேல் நின்றவன் பாரதிராஜா அல்லவா, இரண்டு படங்களில் மலைகளுக்கு மேல் நின்ற பாரதிராஜா, மூன்றாவது படத்தில் தனது சிவப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் ஒரு சைக்கோ திரில்லர் படத்தை இயக்கி வென்று காட்டி, ஒய்யாரமாக இமயத்தில் ஏறி நின்று கொண்டான் அந்த 36 வயது கலைஞன்.
கருத்தம்மா: தனது ஆசைக்கும் விமர்சனங்களுக்கும் படமெடுத்தாகிவிட்டது, இந்த சமூகத்திற்கு அறிவை ஊட்ட வேண்டும் என்ற நோக்கில் எடுத்த கருத்தம்மா படம் அவருக்கு தேசிய விருதை வென்று கொடுத்தது. கருத்தம்மா என்ற பெயர் அவரது தாயாரின் பெயர். தனது தாயாரின் பெயரை தான் தனக்கு இன்ஷியலாக வைத்துக் கொண்டவர் பாரதிராஜா. பெண் சிசு கொலைகளை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்வை ஒரு பிரச்சார படமாக கையாளாமல், மிகவும் நேர்த்தியான திரை மொழியில் கையாண்டதே அவரை இயக்குநர் இமயம் என்று காலத்திற்கும் மெச்சலாம்.

வேதம் புதிது: சாதிகளால் மக்கள் பிளவுற்று உள்ளார்கள், இது மனிதகுலத்திற்கே தீங்கானது என்று மேடைகளில் முழங்கிய பாரதிராஜா, தனது வேதம் புதிது படத்தின் மூலம் எடுத்துரைத்தார். பாலு என்பது உங்கள் பெயர் தேவர் என்பது நீங்கள் படித்து வாங்கிய பட்டமா என்று பளார் கேள்வியை காட்சியாக வைத்து அரசியல் கற்பித்தவர். இலங்கைத் தமிழர் போராட்டக் களத்தில் முன் நின்றவர் பாரதிராஜா. இவரது திரைப்பயணம் அடுத்து வரும் பல தலைமுறை கலைஞர்களுக்கும் ஒரு பல்கலைக்கழக வகுப்பு என்பதில் சந்தேகம் வேண்டாம். இளைப்பாறுங்கள் பாரதிராஜா... தமிழ் சினிமாவின் இதயத்துடிப்பில் நீங்கள் என்றைக்கும் இருப்பீர்கள்.


Click it and Unblock the Notifications