கன்னிகா தானத்தை ஏன் வேண்டாம் என்றேன் தெரியுமா? மனம் திறந்து காரணத்தை சொன்ன பிரபல பாலிவுட் நடிகை!
மும்பை: காதலர் தினத்துக்கு மறுநாள் பிப்ரவரி 15ம் தேதி பிரபல பாலிவுட் நடிகை தியா மிர்சா திருமணம் செய்து கொண்டார்.
தனது கணவர் வைபவ் ரேக்கியிடம் திருமணத்தில் கன்னிகா தான சடங்கு வேண்டாம் என்றும் சில புது மாதிரியான விஷயங்கள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
அதற்கான காரணங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராமில் நீண்ட ஒரு போஸ்ட்டாக போட்டு விளக்கி உள்ளார் தியா மிர்சா.

தோட்டத்திலேயே திருமணம்
கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக தினமும் செடிகளுக்கு நீரூற்றி வளர்த்த என் தோட்டத்திலேயே திருமண வைபவத்தை நிகழ்த்த வேண்டும் என முடிவு செய்தேன். அதே போலவே திருமணத்தையும் அந்த இடத்திலேயே செய்து அசத்தினேன் என தப்பட், சஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை தியா மிர்சா கூறியுள்ளார்.

பெண் புரோகிதர்
திருமண சடங்குகளை அதிகளவில் ஆண் அய்யர்களே நடத்தி வரும் நிலையை மாற்ற வேண்டும் என நினைத்து தனது திருமணத்திற்கு பெண் புரோகிதரை நியமித்தேன் என போட்டோவுடன் போட்டு கூறியுள்ளார் நடிகை தியா மிர்சா. அவரது இந்த புதுவிதமான திருமணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கன்னிகா தானம் வேண்டாம்
திருமணத்தின் முக்கியமான நிகழ்வான கன்னிகா தானத்தை வேண்டாம் என தவிர்த்து விட்டேன். திருமணத்திற்கு பிறகு இவள் என்னுடைய மகள் இல்லை; உங்களுடைய மகள் என என் பெற்றோர் என்னை தாரை வார்ப்பது பிடிக்கவில்லை. அப்படி செய்யவும் கூடாது. திருமண பந்தம் உறவுகளை இணைப்பதே அன்றி முடிவு கட்டுவது அல்ல என நினைத்தே கணவரிடமும் பெரியவர்களிடமும் அதை புரிய வைத்தே அதை தவிர்த்தேன் எனக் கூறி புதுமைப் பெண்ணாக மாறியுள்ளார்.

பிளாஸ்டிக் இன்றி
அதே போல சுற்றுச் சூழலுக்கு தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் பொருட்களை திருமண நிகழ்ச்சியில் பயன்படுத்தக் கூடாது என்றும் சில ஏற்பாடுகளை செய்தோம் என்றும் கூறியுள்ளார். மேலும், பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் மறுசுழற்சிக்கு உட்படுத்தும் விதமாகவே திருமணத்தை நடத்தியதாக பிரத்யேக திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஒவ்வொரு போட்டோவுக்கும் ஒரு கதை சொல்லி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளார் பாலிவுட் நடிகை தியா மிர்சா.


Click it and Unblock the Notifications











