துரந்தர் 2 பாராட்டிய தென்னிந்திய பிரபலங்கள்.. டீப் சைலண்டில் பாலிவுட் ஸ்டார்ஸ்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ் சினிமாவில் ஒற்றுமை இல்லை, ஒரு நடிகர் மற்றொரு நடிகரின் வெற்றியைக் சீர்குலைக்க தனது ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து உள்ளடி அரசியலைச் செய்கிறார் என்ற விமர்சனங்கள் கோலிவுட் வட்டாரத்தில் உலா வந்து கொண்டே இருக்கின்றன. இது மட்டுமல்லாமல் கோலிவுட்டில் ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் இங்கு பான் இந்தியா அளவில் வெற்றியைக் குவிக்கும் படங்களைக் கொடுக்க முடியவில்லை என்று குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
தெலுங்கு சினிமாவை பாருங்கள், இந்தி சினிமாவைப் பாருங்கள், கர்நாடக சினிமாவைப் பாருங்கள் என்று தமிழ் சினிமா உலகத்திற்கு மற்ற சினிமா நடிகர்களுக்கு இடையே இருக்கும் பரஸ்பர நல்லுறவு குறித்து பாராட்டி வருகிறார்கள். உண்மையிலேயே அப்படியான நல்லுறவு இருக்கும் என்றால் அது உள்ளபடி பாராட்டக்குரியது தான். ஆனால் பாலிவுட்டில் சமீபத்தில் வெளியான துரந்தர் 2 படம் பொது வெளியில் ஒரு அப்பட்டமான உண்மையை வெளிக்கொண்டு வந்துவிட்டது.

இயக்குநர் ஆதித்ய தார் இயக்கத்தில் உருவாகி மார்ச் 19ஆம் தேதி வெளியான படம் துரந்தர் 2. இது ஏற்கனவே 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வெளியான துரந்தர் படத்தின் அடுத்த பாகம் தான். படம் பாகஸ் ஆபீஸில் சுமார் 1,365 கோடிகளுக்கு மேல் வசூலித்து விட்டது. இந்த படத்திற்கு தென்னிந்திய சினிமா பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், நடிகர்கள் ராம் சரண், விஜய் தேவரகொண்டா, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினார்கள். அதேபோல் தமிழ் சினிமாவில் இருந்து முதல் நபராக நடிகர் சரத்குமார் பாராட்டினார்.
கண்டு கொள்ளாத ஸ்டார்கள்: தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் படத்தை பாராட்டிய நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்கள் என்று வரிசைப்படுத்தப்படும் டாப் 10 நடிகர்களும் ஸ்டார்களும் இந்த படத்தை கண்டு கொள்ளவே இல்லாதது பேசு பொருளாக மாறியுள்ளது. பாலிவுட்டில் நடிகர்களுக்கு மத்தியிலும் பிரபலங்களுக்கு மத்தியிலும் நல்ல நட்பு உள்ளது, அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கை கொடுத்துக் கொள்கிறார்கள், ஊக்குவித்துக் கொள்கிறார்கள், அவர் ஒன்றாக இணைந்து பாலிவுட் சினிமாவின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள், சக நடிகரின் வெற்றியை தனது வெற்றியாக கொண்டாடுகிறார்கள் என்று எல்லாம் முன்னர் பேசி வந்தனர். ஆனால் துரந்தர் 2 படத்திற்கு எந்தவிதமான ஆதரவும் முன்னணி நடிகர்கள் மத்தியில் இல்லை.

பொய் பிரசாரமா?: இதற்கு வர்த்தக போட்டி தான் காரணம் என்று மேம்போக்காக சொன்னாலும், படத்தின் கதையும் அதை கையாண்ட விதமும் ஒரு காரணமாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. படத்தில் இந்தியாவில் பிரதமர் மோடியால் நடைமுறைப்படுத்தப்பட்ட பணமதிப்பிழப்புக்கு காரணம் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முற்பட்ட 60 ஆயிரம் கோடி கள்ள நோட்டுகளை தடுப்பதற்காகத்தான் என்று சப்பைக் கட்டு கட்டியுள்ளனர் என்ற விமர்சனம் பலராலும் முன் வைக்கப்படுகிறது. இயக்குநர் வெற்றிமாறன் போன்றவர்கள் துரந்தர் படத்தை ஒரு உள்நோக்கம் கொண்ட பிரசாரப் படம் என்று காட்டமாக விமர்சித்தார். இது போன்ற காரணங்களால் தான் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களும் பிரபலங்களும் இந்த படத்தை கண்டு கொள்ளவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது.


Click it and Unblock the Notifications











