அதிருப்தியில் விக்ரம்..பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளாததற்கு என்ன காரணம்!
சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொள்ளாதது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்கி இருக்கிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயராம், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சரத்குமார், விக்ரம் பிரபு, பிரபு, உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப். 30-ம் தேதி வெளியாக உள்ளது.

பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக சரியாக இன்னும் இரண்டு மாதமே இருப்பதால் இத்திரைப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அண்மையில் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. சீறிப்பாய்ந்து வந்த கப்பல்,யானை படை, குதிரைப்படை,விக்ரமின் கர்ஜனை என டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறி வருகின்றனர்.

பெயர் சர்ச்சை
அதேபோல, விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா,ஐஸ்வர்யா ராய் ஆகியோரின் கதாபாத்திர பெயர் போஸ்டரை வெளியிட்டது. இதில், விக்ரம் நெற்றியில் இருப்பது நாமமா அல்லது திலகமா என்றும் அருண்மொழி வர்மனா அல்லது அருள்மொழி வர்மனா என பல சர்ச்சைகள் இணையத்தில் கிளம்பியது. இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்துள்ளது.

அதிருப்தியில் விக்ரம்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த விழாவில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்டவர் மட்டுமே கலந்து கொண்டனர். டீசர் வெளியீட்டு விழாவின் போது விக்ரம் மருத்துவமனையில் இருந்ததால் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, நடைபெற்ற கோப்ரா இசைவெளியீட்டு விழாவில் விக்ரம் கலந்து கொண்டார். ஆனால், பொன்னியில் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை.

இதுதான் காரணம்
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு குறைந்த அளவிலான காட்சிகள் மட்டுமே இருப்பதாகவும், இதனால் அவர் மணிரத்னம் மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டது. இந்த காரணத்தால் தான் பாடல் வெளியீட்டு விழாவை விக்ரம் புறக்கணித்தாகவும் கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











