சசிகலா பற்றி ஏன் சொல்லல? சிக்கலில் மாட்டிக்கொண்ட கெளதம் மேனன்.. ஜெ. பயோ சீரிஸால் பிரச்சனை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து இயக்குனர் கெளதம் மேனன் எடுக்கும் ஆன்லைன் சீரிஸுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து இயக்குனர் கெளதம் மேனன் எடுக்கும் ஆன்லைன் சீரிஸுக்கு சிக்கல் மேல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா குறித்து இயக்குனர் கெளதம் மேனன் வெப் சீரிஸ் ஒன்று எடுத்து வருகிறார். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து அவர் இதை இயக்கி வருகிறார்.
வாழ்க்கை வரலாறு போல இல்லாமல் மிகவும் திரில்லாக இருக்கும் வகையில் கெளதம் மேனன் இந்த தொடரை இயக்கி வருகிறார்.

யார் கதை
கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இதில் இன்னொரு இயக்குனராக செயல்படுகிறார். அவர் வரலாற்று கதைகள் எழுதுவதில் அதிக அனுபவம் கொண்டவர் என்பதால் இதில் பணியாற்றுகிறார். ஜெயலலிதா சினிமாவில் இருந்தது, அரசியலுக்கு வந்தது, முதல்வர் ஆனது, சொத்து குவிப்பு வழக்கு, சர்ச்சைகள் என்று அனைத்தையும் சீரிஸாக எடுக்க இருக்கிறார் கெளதம் மேனன்.

என்ன பெயர்
இதற்கு குயின் என்று பெயர் வைத்துள்ளனர். ஜெயலலிதா குழந்தை கதாபாத்திரத்தில் ‘விஸ்வாசம்' படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா நடித்து வருகிறார். அதேபோல் இளம் பருவ ஜெயலலிதா கெட்டப்பிற்கு ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

சசிகலா இல்லை
இதில் சசிகலா பாத்திரம் கிடையாது. ஆனால் முதலில் இதில் சசிகலா கதாபாத்திரத்தை வைத்துதான் கதையை உருவாக்கி உள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த பாத்திரத்தை மொத்தமாக நீக்கிவிட்டார்கள். ஜெயலலிதா வாழ்க்கையில் சசிகலா வந்த எந்த ஒரு காட்சிகளும் இந்த தொடரில் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏன் இப்படி
ஆனால் இதற்கு தயாரிப்பு குழு எந்த விதமான விளக்கமும் கொடுக்கவில்லை. ஏன் சசிகலாவின் பாகம் தொடரில் இருந்து நீக்கப்பட்டது, யார் கொடுத்த அழுத்தம் காரணம் என்று எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை.

பின்னணி என்ன
ஏற்கனவே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதேபோல் சசிகலா குறித்தும் கெளதம் மேனனுக்கு யாராவது அழுத்தம் கொடுத்திருப்பார்கள். அதனால்தான் அவரின் பாத்திரத்தை நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.

சிலர் கோபம்
சசிகலா இல்லாமல் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுப்பது, சசிகலாவின் ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்களை பற்றி தொடர் எடுக்கும் போது உண்மையை எடுக்க வேண்டும், என்று டிவிட்டரில் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











