ஏன் ரிலீஸ் ஆகலை? நாடோடிகள் 2 பட சிக்கலுக்கு இதுதான் காரணமா?
Recommended Video
சென்னை: சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 படம் ரிலீஸ் ஆகாதது ஏன் என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபினயா நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய படம், நாடோடிகள். 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு சுந்தர் சி பாபு இசை அமைத்திருந்தார். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். மைக்கேல் ராயப்பன் தயாரித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது.

இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. சமுத்திரக்கனி இயக்கியுள்ளார். சசிகுமார், அஞ்சலி, அதுல்யா ரவி, பரணி, நமோ நாராயணன் உட்பட பலர் நடித்துள்ளனர். மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக, நந்தகோபால் தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே விஷாலின் கத்திச் சண்ட, விஜய் சேதுபதியின் 96, விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி உட்பட சில படங்களைத் தயாரித்தவர்.
நாடோடிகள் 2 படம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகியும் ரிலீஸ் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் அறிவிப்பு வரும். பிறகு ரிலீஸ் தள்ளிப் போனதாகத் தகவல் வரும்.
இந்நிலையில் இந்தப் படத்தை இயக்குனர் சமுத்திரக்கனியே ரிலீஸ் பண்ணுவதாகக் கூறப்பட்டது. அவர் அடுத்தடுத்தப் படங்களில் பிசியாக இருப்பதால், ரிலீஸ் செய்யவில்லை. என்ன பிரச்னை என்று விசாரித்தபோது, தயாரிப்பாளர் மீது கைகாட்டுகிறார்கள் எல்லோரும்.
இந்தப் படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் சமுத்திரக்கனி தயாரித்து இயக்கினார். அதாவது ரூ.13 கோடிக்கு இந்தப் படத்தை தயாரித்துக்கொடுக்க வேண்டும். ஆனால், ரூ.10 கோடிதான் தயாரிப்பாளர் தரப்பில் கொடுக்கப்பட்டதாம்.
இருந்தாலும் சமுத்திரக்கனி கடன் வாங்கி, படத்தை முடித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளருக்கு முந்தைய படங்களின் கடன்கள் ரூ.10 கோடிக்கு மேல் இருப்பதால், அதை அடைக்காமல் இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. அதனால்தான் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் என்று கூறப்படுகிறது.
விஜய் சேதுபதியின் 96, விஷாலின் கத்தி சண்டை படங்களுக்கும் ரிலீஸ் நேரத்தில், இதே போல சிக்கல் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











