கிறிஸ்தவர்கள் மேல் பாலாவிற்கு என்ன வன்மம்.. வணங்கான் படத்தில் எதற்கு அந்த சீன்.. நெட்டிசன்ஸ் கேள்வி!
சென்னை: இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10ந் தேதி வெளியான படம் வணங்கான். இதில் அருண் விஜய்யுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஸ்கின், சாயா தேவி என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வணங்கான் படத்திற்கு முதல் நாள் நல்ல ஓபனிங் இல்லாத போதும், படத்திற்கு மக்களிடம் இருந்து வந்த விமர்சனத்தை தொடர்ந்து, தியேட்டருக்கு சினிமா பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர்.
அஜித் நடித்த, என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய், நடித்த விக்டர் என்கிற கதாபாத்திரம் எப்படி அவருக்கு பெயரை பெற்று தந்ததோ, அதேபோல வணங்கான் படத்தில் அருண் விஜய் நடித்த கோட்டி என்ற கதாபாத்திரம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று கொடுத்திருக்கிறது. அருண் விஜய்யின் திரை வாழ்க்கையில் வணங்கான் படம், அழிக்க முடியாத காவியம் ஆகிவிட்டது என, அருண் விஜயின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இயக்குநர் பாலா: சேது, பரதேசி, நந்தா போன்ற திரைப்படங்களில் பல விஷயத்தை அழுத்தமாக சொன்ன பாலா, வணங்கான் திரைப்படத்தில் பல விஷயத்தை அழுத்தமாக சொல்லவில்லை. குறிப்பாக முதல் பாதி மிகவும் மெதுவாகத்தான் செல்கிறது. ஆனால், திடீரென படம் விறுவிறுப்பாகி விட்டது. இது, பாலாவின் வழக்கமான முறை இல்லை என்பதால், இது பாலாவின் படம் போலவே இல்லை என்று, பாலாவின் ரசிகர்கள் அவர் மீது கடுப்பில் இருக்கிறார்கள்.
கிறிஸ்தவர்கள் மீது ஏன் வன்மம்: மேலும், கிறிஸ்தவ மதத்தை ஏதாவது ஒரு வகையில் குறை சொல்வது பாலாவின் வழக்கம். பரதேசி படத்தில், கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்பினார்கள் என்பதை ஒரு பாட்டில் சொல்லி இருப்பார். ரொட்டி துண்டுக்காக மதம் மாறினார்கள் என்று எல்லாம் சொல்லி இருப்பார். அதேபோல வணங்கான் படத்திலும், ஒரு காட்சி வைத்திருக்கிறார். அதாவது, அந்த படத்தில் வரும், பாதர் குங்குமம் வைத்துக்கொண்டு வருகிறார். அவர் ஏன் அவ்வாறு வருகிறார் என்ற காரணத்தை சொல்லவில்லை. அதேபோல, அவர்கள் அணிந்து வரும் உடையை யூனிபார்ம் என்றும், படத்தின் பல இடத்தில், பாதரை, வாடா போடா என்று பேசும் வசனம் வருகிறது.
தனிப்பட்ட வன்மமா? பாலா, தொடர்ந்து தன்னுடைய படங்களில் கிறிஸ்தவர்களை விமர்சனம் செய்து வரும் போதிலும், இதுவரை எந்த கிறிஸ்தவர்களும் போராட்டம் நடத்தவில்லை. அது, அவர்களின் பண்பை காட்டுகிறது. இதே வேறு சமூகத்தை, இவ்வாறு விமர்சனம் செய்து படத்தில் காட்சியை வைத்திருந்தால், போராட்டம் பெரிய அளவில் வெடித்திருக்கும். கிறிஸ்தவர்கள் மீது பாலாவிற்கு ஏதோ ஒரு வகையில் தனிப்பட்ட வன்மம் இருக்கிறது. அது ஏதோ ஒரு வகையில் தனது படத்தின் மூலம் அவர் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார். வீம்புக்கு என்றே இதுபோன்ற காட்சிகளை பாலா தொடர்ந்து பயன்படுத்தி வருவது, திரையில் படத்தை பார்க்கும்போது, மனதிற்குள், ஒரு நெருடலாகவே இருக்கிறது. இந்த போக்கை பாலா மாற்றிக்கொள்ள வேண்டும் என்று இணையவாசிகள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











