சர்கார் கதைப் பிரச்சினை.. கே.பாக்யராஜ் சந்தித்த ‘அந்த’ சொல்ல முடியாத அசௌகரியங்கள்!
சர்கார் பிரச்சினையால் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் கே.பாக்யராஜ்.
Recommended Video

சென்னை: தென்னிந்திய எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறார் இயக்குனர் கே.பாக்யராஜ்.
சர்கார் திரைப்படத்தின் கதை தன்னுடையது தான் என ஒரு உதவி இயக்குனர் எழுத்தாளர் சங்கத்தில் முறையிட, உடனடியாக அதை கையில் எடுத்து விசாரிக்கத் தொடங்கினார் அதன் தலைவர் இயக்குனர் கே.பாக்யராஜ். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, இந்தியாவின் மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர். எனவே இரண்டு படங்களில் கதையை படித்த உடனே புரிந்துகொண்டார் விஷயம் என்ன என்பதை.

முதலில் ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து குணமாக தான் எடுத்துக் கூறினார். ஆனால் அவரோ இறங்கி வரவில்லை. கெஞ்சியும் கூட உடன்படாததால், எழுத்தாளர் சங்கத்தின் சக்தி என்ன என்பதை முருகதாஸ் புரிந்துகொள்ளும் வகையில், உண்மையை விவரித்து வருணிடம் கடிதம் ஒன்றை வழங்கினார். ஆனால் இதனை பாக்யராஜின் குடும்பத்தினரே விரும்பவில்லை என கூறப்பட்டது. காரணம் அவரது மகன் சாந்தனுவும் தீவிர விஜய் ரசிகர். அதோடு அவர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இந்தப் பிரச்சினையால் அவரது எதிர்காலமும் பாதிப்படையக் கூடாது என்ற கருத்து அவரது வீட்டிலேயே நிலவியது.
இருப்பினும் ஒரு உதவி இயக்குனருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பாக்யராஜ். அவர் தந்த கடிதத்தை அடிப்படையாக வைத்து வருண் ராஜேந்திரன் வழக்கு தொடரவே, வேறு வழியே இல்லாமல் சமரசத்துக்கு வந்தனர் முருகதாஸும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனும். இந்த விவகாரத்தால், பாலிவுட் வரை சென்று கோலோச்சிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இமேஜ் சுக்கு நூறாக உடைந்தது.
இதற்கிடையே பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் சர்கார் படத்தின் கதையை வெளியிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் பாக்யராஜ். இதற்காக மன்னிப்பு கோரி, தற்போது தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சர்கார் பட விவகாரத்தால் பல அசௌகரியங்களைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளர் பாக்யராஜ். அவை என்ன மாதிரியான அசௌகரியங்கள் என்பதை பாக்யராஜ் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும்கூட, அவை என்ன மாதிரியானதாக இருந்திருக்கும் என்பது எல்லாராலும் யூகிக்க முடிந்த ஒன்றே.
தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில், முன்னாள் நிர்வாகிகளான விசு மற்றும் பிறைசூடன் ஆகியோருக்கும் பாக்யராஜுக்கும் ஏற்கனவே பிரச்சினை இருந்தது அனைவரும் அறிந்ததே. சர்கார் பட விவகாரத்தால், பாக்யராஜுக்கு நெருக்கடி முற்றி வந்த நிலையில், ஏற்கனவே இருந்த பகையும் சேர்ந்து அவரது பதவியை பறித்திருக்கிறது.
சினிமாவில் நேர்மையாக ஒரு விஷயத்தை கையாண்டால், அவர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதற்கு உதாரணமாகி இருக்கிறார் பாக்யராஜ். சர்கார் கதை விவகாரத்தில் ஏற்பட்ட முடிவு, பல எளிய சினிமா இயக்குனர்களை நிம்மதி பெருமூச்சுவிட வைத்தது. ஒரு நம்பிக்கையை தந்தது. ஆனால் பெரிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களை இனிமேல் யாரும் பகைத்து கொள்ள நினைக்கக் கூடாது என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது பாக்யராஜின் ராஜினாமா.
இருப்பினும் தென்னிந்திய எழுத்தாளர் சங்க தேர்தலில் போட்டியிட்டு, மீண்டும் தலைவர் ஆவேன் என உறுதிபூண்டிருக்கிறார் கே.பாக்யராஜ். நல்ல உள்ளங்கள் அனைத்தும் அவருக்கு உறுதுணையாக நிற்கட்டும்.


Click it and Unblock the Notifications











