தரமான படங்களுக்கு கேரண்டி கொடுக்காத தயாரிப்பு நிறுவனங்கள்.. ரசிகர்களை குறை சொல்லி என்ன பயன்?
சென்னை: தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் இருக்கும் அனைத்து திரையுலகங்களுக்கும் பிரதான நோக்கம் வசூல், பணம், பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டு அவ்வளவுதான். இந்தியா முழுவதும் ரசிகர்களுக்கு திருப்தியான படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் மிகச் சொற்பம். தொடர்ந்து மொக்கைப் படங்கள் கொடுத்துவிட்டு ரசிகர்களை குறைகூறும் தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன.
சினிமாவில் வெற்றி பெறுவது என்பது மாரத்தானில் ஓடி வெற்றி பெறுவது போல. பல நூறு கோடிகளை செல செய்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம் வருடத்தின் ஒரு வெள்ளிக்கிழமையை பிடிக்க மிகப்பெரிய போராட்டத்தை எதிர்கொள்ள உள்ளது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழல்தான் சினிமாவில் எடுக்கப்படுகிற ஒவ்வொரு முடிவும். அப்படி இருக்கும்போது பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களை தொடர்ந்து பெரிய தயாரிப்பு நிறுவனமாக காட்டிக் கொள்ள, பெரிய நடிகர்களை வைத்தே படம் தயாரிக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். அந்த படம் தோல்வியைத் தழுவினாலும் மீண்டும் அகலக் கால் தான் வைக்கிறார்களே தவிர, நல்ல படம் கொடுக்க வேண்டும் என தங்களை திருத்திக் கொள்கிற தயாரிப்பு நிறுவனங்கள் மிகவும் குறைவு.
உதாரணமாக லைகா நிறுவனமும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனமும் அந்த வரிசையில் இடம் பெற தகுதியானவர்கள். லைகாவின் கடைசி படமான விடாமுயற்சி மட்டும் இல்லாமல் கடைசியாக அவர்கள் தயாரித்த பல படங்கள் தோல்விதான். வேட்டையன் படம் மட்டும் அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். ஆனால் பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் உருவாக்க அவர்கள் செய்த செலவும் படத்தின் வசூலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்றுதான் கூறவேண்டும்.

பட்டும் திருந்தல: பொன்னியின் செல்வன் நாவல், பெரும்பாலான நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் எனவே படம் பிரமாண்டமான வெற்றியைக் குவிக்கும் என படக்குழுவோ திரையுலகமோ எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் நடந்தது, வசூல் ரீதியான தோல்விதான். இந்தியன் 2 படத்திற்கும் அதே கதிதான். அதேபோலத்தான் கங்குவா படமும். கடந்த ஜூன் மாதம் வெளியான தக் லைஃப் படத்தையும் அந்த வரிசையில் சேர்க்கலாம். நேர்த்தி இல்லாத கதை, சொதப்பலான திரைக்கதை என படத்தின் ஆணிவேரிலேயே பல ஓட்டைகளை வைத்துக் கொண்டு ரசிகர்களுக்கு ரசனை இல்லை என தயாரிப்பு நிறுவனங்கள் கூறுவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.
நல்ல படங்கள்: இப்படியான படுதோல்வி படங்களுக்கு மத்தியில் தான் குடும்பஸ்தன், டிராகன், டூரிஸ்ட் ஃபேமிலி, 3 பி.ஹெ.கே, மெட்ராஸ் மேட்னி, தலைவன் தலைவி போன்ற படங்களும் வெற்றி பெறுகின்றன ( குட் பேட் அக்லி வசூல் ரீதியான வெற்றி என்றாலும் அஜித் ரசிகர்களை கடந்து மற்றவர்களுக்கு படத்தில் டேக்-அவே என எதுவும் இல்லை). இந்த ஆண்டில் முதல் 7 மாதத்தில் தமிழ் சினிமாவில் வெளியான 100 க்கும் மேற்பட்ட படங்களில் வெற்றி பெற்ற படங்களின் எண்ணிக்கை என்பது சொற்பமே.

பொய்: தோல்வியைத் தழுவிய படங்களின் தயாரிப்பு செலவுகளின் கூட்டுத்தொகை பல ஆயிரம் கோடிகளைத் தொடலாம். அதே நேரத்தில் மக்களால் அங்கீகரிப்பட்டு வெற்றிகளை எட்டிய படங்களின் லாப சதவீதங்கள் மட்டும் பல நூறு சதவீதங்களாக உள்ளது. பெரிய நடிகர்களால் படம் ஹிட் ஆகும், பெரிய இயக்குநரால் படம் ஹிட், பல நூறு கோடிகள் செலவில் படத்தை எடுத்தால் படம் ஹிட் ஆகும் என்பது எல்லாம் பொய். அழுத்தம் திருத்தமான, எமோஷனல் நிறைந்த, அனைவரையும் கனெக்ட் செய்யக்கூடிய கதைகளாக இருக்கும்போது, மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். அதேபோல் ரசிகர்கள் எதார்த்தமான கதையான மெய்யழகன் போன்ற படத்தை பிரமாண்டமான வெற்றியை நோக்கி நகர்த்தி இருக்க வேண்டும்.
பெயர் சொல்லும் நிறுவனங்கள்: ஏ.வி.எம். சூப்பர் குட் ஃபிலிம்ஸ். விஜய புரெடக்ஷன்ஸ் போன்ற பெயர் சொல்லும் நிறுவனங்கள் சினிமாவில் இருந்து மெல்ல மெல்ல விலகிய பின்னர் நம்பிக்கை ஏற்படுத்தும் தயாரிப்பு நிறுவனங்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ட்ரீம் வாரியர்ஸ், மில்லியன் டாலர்ஸ் போன்ற மிகவும் சொற்பமான தயாரிப்பு நிறுவனங்களே உள்ளன.


Click it and Unblock the Notifications











