ரவி மோகன் தோழியுடன் திருமணத்திற்கு வந்தது குற்றமா?.. ஆர்த்தியின் ஆவேசத்திற்கு என்ன காரணம் என்ன?
சென்னை: இன்றைக்கு அதாவது மே 9ஆம் தேதி காலையில் தமிழ் திரையுலகில் பலரும் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த விஷயம் என்றால் அது தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்ச்சி குறித்து தான். ஆனால் இன்று மாலையே மொத்த தமிழ் சினிமாவின் பேச்சும் நடிகர் ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி வெளியிட்டுள்ள கடிதம் தொடர்பானதுதான். ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு ரவி மோகன் தனது தோழியும் பாடகியுமான கெனிஷாவுடன் வந்திருந்ததுதான் ஆர்த்தியின் கடிதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ரவி மோகனும் ஆர்த்தியும் கடந்த 2009 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. அதில் முதல் குழந்தைக்கு 14 வயதும் இரண்டாவது குழந்தைக்கு 10 வயதும் ஆகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து நான் வெளியேறுவதாக நடிகர் ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அதன் பின்னர் விவாகரத்திற்கு விண்ணப்பித்து உள்ளார். ஆனால் ஆர்த்திக்கு திருமண உறவில் இருந்து வெளியேற விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார். இதனால் அவர்களின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் உள்ளது.
அவர்களின் விவாகரத்து முடிவே பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. இது தொடர்பான தகவல் வந்த போது, பலரும் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் டேட்டிங்கில் இருப்பதாக தெரிவித்தார்கள். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ரவி மோகன், கெனிஷா தனது தோழி என்றும், அவருடன் இணைந்து ஹீலிங் சென்டர் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

கடிதத்திற்கு காரணம்: இந்நிலையில் இவ்வளவு காலம் அமைதியாக இருந்த ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி, இன்று வெளியிட்டுள்ள கடித்தத்தில் ரவி மோகனின் பெயர் இல்லை என்றாலும், அவர் தெரிவித்துள்ள விஷயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. ரவி மோகன் மீதான அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, " இத்தனை நாட்களாக நான் அமைதியாக இருந்ததற்கு காரணம், என் பக்கம் நியாயம் இல்லாமல் போனதால் அல்ல. என் மீது வீசப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளிக்காமல் நான் அமைதியாக இருந்ததற்கு காரணம் என்னிடத்தில் உண்மை இல்லை என்று அர்த்தம் கிடையாது. பெற்றோர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையால் குழந்தைகள் பாதிப்படைய கூடாது என்பதால்தான்.
18 ஆண்டுகளாக என் காதலிலும், நம்பிக்கையிலும், விசுவாசத்திலும் உடன் இருப்பேன் என்று கூறியவர் இவற்றில் இருந்து விலகிவிட்டார் என்பதைக் காட்டிலும் ஒரு அப்பாவாக அவரது பொறுப்புகளில் இருந்து வெளியேறிவிட்டார். குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு பல மாதங்களாக எனது தோளில் மட்டுமே உள்ளது. குழந்தைகளை தனது பெருமை என்று ஒரு காலத்தில் கூறியவர் இன்றைக்கு குழந்தைகள் குறித்து எந்த அக்கறையும் செலுத்தாமல் உள்ளார்.

வருத்தம்: நாங்கள் தங்கியிருக்கும் வீட்டை விட்டு நாங்கள் வெளியேறும் சூழலில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் அந்த வீட்டை நான் யாருடன் இணைந்து கட்டினேனோ அவராலே வெளியேற்றப்படுவது தான் வருத்தத்தை அளிக்கிறது. நான் இப்போது இதை எழுதி இருப்பது, பழிவாங்குவதற்காக அல்ல. சண்டை போடுவதற்காகவும் அல்ல. ஒரு தாயாக நான் நெருப்பில் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை வெளிப்படுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
ஆர்த்தியின் இந்த பதிவை பார்த்த பலரும் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் ஆர்த்திக்கு ஆறுதல் சொல்லியும் வருகிறார்கள். ஆர்த்தியின் ஆதங்கம் நியாயமானதுதான் என்று கூறுபவர்களும் உள்ளார்கள். அதற்கு காரணம், காதலித்து திருமணம் செய்து கொண்ட நபர் திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக தன்னிச்சையாக முடிவெடுக்கும்போது மனதளவில் மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்படும் தான். அதனால்தான் ஆர்த்தி விவாகரத்தில் இருந்து வெளியேற சம்மதம் தெரிவிக்காமல் உள்ளார்.

ஆர்த்திக்கு ஆதரவு: இந்த விஷயத்தில் ஆர்த்திக்கு ஆதரவாக பேசுபவர்கள், ஆர்த்திக்கு ஆறுதல் சொல்பவர்கள் ரவி மோகனை கடுமையாக விமர்சிப்பதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக அவர் தனது தோழி கெனிஷாவுடன் இணைந்து திருமண நிகழ்விற்கு வந்ததைப் பார்த்தவர்கள், ரவி மோகனின் புதிய காதலி பாடகி கெனிஷா. ஆர்த்தி உடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே, ரவி மோகன் தனது புதிய காதலி கெனிஷாவுடன் இணைந்து தம்பதிகள் போல விழாக்களில் கலந்து கொள்கிறார் என்று விமர்சிக்கிறார்கள். ஆர்த்தி வெளியிட்டுள்ள கடிதத்தில் கூட ரவி மோகன் குறித்தோ, கெனிஷா குறித்தோ எங்கும் குறிப்பிடவில்லை.
ஆனால் ஆர்த்திக்கு ஆதரவாக கருத்து சொல்பவர்களில் சிலர் ஜெயம் ரவியையும் கெனிஷாவையும் காதலர்கள் என்கிறார்கள், விட்டால் சிலர் அவர்களுக்கு திருமணமே செய்து வைத்துவிடுவார்கள் போல. ரவி மோகன் மிகத் தெளிவாக ஏற்கனவே தெரிவித்துவிட்டார். கெனிஷா எனது தோழி. அவரையும் என்னையும் சேர்த்து வைத்து பேசாதீர்கள். மேலும் சொந்த வாழ்க்கை குறித்து முறையற்ற கருத்துக்களைத் தெரிவிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
குற்றமா? : ரவி மோகன், ஆர்த்தி உடனான சுமூகமான திருமண உறவில் இருந்து கொண்டு, தோழி கெனிஷாவுடன் திருமணத்திற்கு வரவில்லை. அப்படி வந்தாலும் தவறு இல்லை. மேலும் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது மட்டும் இல்லாமல் விவாகரத்து பெற சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். அப்படி இருக்கும்போது ரவி மோகனை மொத்தமாக குற்றவாளியாக பாவிப்பது எந்த வகையில் நியாயம் என்றும் சிலர் பதில் கேள்வி எழுப்புகிறார்கள்.
அதேபோல் விவாகரத்து அறிவிப்பதற்கு முன்னரோ, விவாகரத்திற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னரோ ரவி மோகன் மீது குற்றச்சாட்டுகள் இருக்கும் பட்சத்தில் அதை ஆர்த்தி தரப்பில் நீதிமன்றத்தில் கூறிக் கொள்வார்கள். அது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த முடிவு. ஆர்த்தி தனது கடிதத்தில், மகன்களை வளர்க்கும் பொறுப்பு முழுவதும் தனது தோள் மீது இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது நியாயமான கேள்வியாக உள்ளது. இதனை அவர் நீதிமன்றத்தில் முறையிட்டும் தனக்கான நீதியைப் பெறுவார் என்று நம்பலாம்.
ரசிகர்கள் கவனத்திற்கு: ஆர்த்திக்கு ஆறுதலாக பேசுகிறோம் என்று திருமண உறவில் இருந்து முறையாக வெளியேறி, தனது வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்ட செல்ல முயற்சிக்கும் ரவி மோகனை கண்மூடித்தனமாக விமர்சிப்பதும் குற்றவாளியாக பாவிப்பதும் தவறு. மேலும் பிரபலங்களின் சொந்த வாழ்க்கை குறித்த விஷயங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டும் ரசிகர்கள், அவற்றை முழுவதுமாக தெரிந்து கொண்டோ, அல்லது சிந்தித்தோ விமர்சிப்பது சரியானதாக இருக்கும். அதே நேரத்தில் ரவி மோகனை விமர்சிக்கும் இந்த ரசிகர்கள் கூட்டமும் இணையவாசிகளும் அவரைப்போல அவரது முன்னாள் மனைவி ஆர்த்தி செய்திருந்தால், ஆர்த்தியை இதைவிட கூடுதலாக விமர்சித்திருப்பார்கள் என்றும் சிலர் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











