சினிமா போஸ்டர்களுக்கு சென்சார் சான்று சட்டம் என்னவாச்சு? - அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை: சினிமா போஸ்டர்களுக்கு கட்டாய சான்று அளிக்கும் சட்டம் என்ன ஆனது என்று தமிழக செய்தி மக்கள் தொடர்புதுறைக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திரைப்படங்களுக்கு சென்சார் சான்று வழங்குவதைப் போன்றே சினிமா போஸ்டர்களுக்கும் சான்றிதழ் பெற வேண்டும் என்கிற சட்டம் 1987-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வரவே இல்லை.

ஏன் நடை முறைக்குக் கொண்டு வரவில்லை... இதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தெரியுமா? என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
வீட்டை விட்டு ஓடிய தன் மகளைக் கண்டுபிடித்து தருமாறு ஒரு தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீஸ் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு மகளைக் கண்டுபிடித்தனர். அவர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்கு மூலத்தில் சினிமா பார்த்து அந்த பாதிப்பில் ஒருவரைக் காதலித்து அவருடன் ஒடிவிட்டதாகக் கூறினார்.
சென்சார் வாரியம் படங்களை சரியாக தணிக்கை செய்வதில்லையா? இளம் பெண்கள் படம் பார்த்து கெட்டுப்போகிற அளவிற்கான சினிமாவை ஏன் அனுமதிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருந்தது நீதிமன்றம்.
இது தொடர்பாக தணிக்கை குழு அதிகாரி மதியழகன் கோர்ட்டில் ஆஜராகி, தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை பின்னர் படத்தில் சேர்த்து திரையிட்டு விடுகிறார்கள் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிறுவர், சிறுமிகளை, இளைஞர்களை சினிமா பார்க்க தூண்டுவது அதன் போஸ்டர்கள்தான். சினிமா போஸ்டர்களுக்கு கட்டாய சான்று அளிக்கும் சட்டம் 1987ம் ஆண்டே நிறைவேற்றப்பட்டும், அது ஏன் இன்னும் அமலுக்கு வரவில்லை? இதுகுறித்து தணிக்கை வாரியம், தமிழக செய்தி மக்கள் தொடர்புத்துறை விளக்கம் அளிக்க வேண்டும், என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











