கேன்ஸில் தொடரும் இந்தி ஆதிக்கம்... ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையே!
இந்தியாவின் சூப்பர் ஸ்டார், ஸ்டைல் மன்னன் என ரஜினி கொண்டாடப்பட்டாலும், உலக நாயகன், நிகரற்ற நடிகன் என கமலை நாடே புகழ்ந்தாலும், சர்வதேச அளவிலான அங்கீகாரம் மட்டும் உடனடியாகக் கிடைப்பது பாலிவுட் படங்களுக்குத்தான்.
ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனைத் தவிர வேறு நடிகைகள் யாரையும் சர்வதேச சினிமா விழா ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவதே இல்லை. சிவப்புக் கம்பள வரவேற்புகளில் ரஜினியோ, கமலோ, நயன்தாராவோ, ஹன்சிகாவோ, த்ரிஷாவோ பங்கேற்பதில்லை... ஆனால் அமிதாப்பும், ஷாரூக்கும், தீபிகாவும், ஐஸ்வர்யா ராயும் தவறாமல் பங்கேற்கிறார்கள்.

தென்னிந்தியாவில் தயாராகும் சிறந்த படங்கள் பெரும்பாலும் கேன்ஸ் விழாக்களில் பங்கேற்பதே இல்லை. வெகு அரிதாக, வெயில் படம் மட்டும் கேன்ஸ் போய் விருது பெற்றது. பில்லா போன்ற படங்களை கேன்ஸுக்கு வெளியே ஜஸ்ட் திரையிட்டு திருப்திப்பட்டுக் கொண்டனர்.
ஆனால் மற்ற தென்னிந்திய மொழிப் படங்கள் எதுவும் கேன்ஸில் பங்கேற்பதில்லை.
இதுகுறித்து தென்னிந்திய மொழிப் படங்களின் இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ அல்லது சினிமா அமைப்புகளோ கவலைப்படுவதும் இல்லை, படங்களை அங்கே கொண்டு போக முயற்சி எடுப்பதும் இல்லை.
ஏன் எடுக்க வேண்டும்... அதில் என்ன நன்மை என்றெல்லாம் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்று ஹாலிவுட் படங்கள் உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காரணங்களில் ஒன்று, இதுபோன்ற சர்வதேச அளவிலான விழாக்கள்தான். குறிப்பிட்ட மொழிப் படங்களை உலகமயமாக்குவது, அந்த மொழி சினிமாவுக்கான சந்தைகளை விரிவுபடுத்த உதவும். சர்வதேச சினிமாவின் தரத்துக்கேற்ப நம் படங்களை உருவாக்குகிறோமா என்ற சுயபரிசோதனைக்கு கலைஞர்களை உட்படுத்தும். இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
இந்த ஆண்டுதான் கமல்ஹாஸன் தலைமையில் ஒரு குழு கேன்ஸ் சென்றுள்ளது. இவர்களாவது, இந்த நிலையை மாற்றுவார்களா... தென் இந்திய மொழிப் படங்கள், குறிப்பாக தமிழ்ப் படங்கள் ஆண்டுதோறும் குறைந்தது ஒன்றிரண்டாவது இடம்பெற வழிவகுப்பார்களா?


Click it and Unblock the Notifications











