Chithra Father Suicide:சித்ராவின் துப்பட்டாவிலேயே தூக்கு.. தற்கொலைக்கு காரணங்கள் இதுவா? பாவம் மனுசன்
சென்னை: இந்த ஆண்டின் இறுதி நாள், மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் ரசிகர்களுக்கு இவ்வளவு சோகமாக அமையும் என யாருமே நினைத்திருக்கமாட்டார்கள். சித்ராவின் தந்தை காமராஜ், சென்னை, திருவான்மியூரில் வசிக்கும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள பயன்படுத்தியது, அவரது மகள் சித்ராவின் துப்பட்டாதான். அவரது தற்கொலைச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்களுக்கு, இந்தத் தகவல் பெரும் மனவலியை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் தற்கொலைக்கான காரணம் என்ன என்ற கேள்வி பலரது மத்தியில் எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸில் நடித்து வந்த சித்ரா, அந்தத் தொடர்மூலம், தமிழ்நாட்டு மக்களிடமும் நன்கு பிரபலமானவராக மாறினார். இவருக்காகவே, அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் பலர். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் வட்டாரங்கள் அதிகமானது. சினிமாவிலும் நடிக்க ஒரு படத்தில் கமிட் ஆகியிருந்தார் சித்ரா. இப்படியான நிலையில்தான், கடந்த 2020ஆம் ஆண்டு தனது காதல் கணவருடன், பூந்தமல்லியை அடுத்துள்ள நசரத் பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்கியிருந்தார். ஓட்டலில் தங்கியிருந்த இவர், அங்கிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

காவல்துறை அறிக்கையில், சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது. இப்படியான நிலையில், நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது காதல் கணவர் ஹேம்நாத் தான் காரணம் எனவும் கூறப்பட்டது. இதனால், அவர் சில மாதங்கள் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்தார். திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் தொடங்கி, சென்னை உயர்நீதிமன்றம் வரை, ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என தெரிவித்து அவரை விடுதலை செய்தனர்.
மன வருத்தம்: ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்பினால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான, சித்ராவின் தந்தை காமராஜ், கடந்த சில மாதங்களாகவே பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். பாசத்தைக் கொட்டி வளர்த்த மகள், தற்கொலை செய்து கொண்டதை அவரால் ஜீரணக்கவே முடியவில்லை. வீட்டுக்கு உறவினர்கள் தொடங்கி நண்பர்கள் வரை யார் வந்தாலும் தனது மகளின் தற்கொலை குறித்து பேசிப்பேசி, அழுதுகொண்டே இருப்பாராம்.
காரணம்: மீளா துயரத்தில் இருந்த சித்ராவின் தந்தை காமராஜுவை அவரது குடும்பத்தினர், துயரத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவர, எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துள்ளனர். ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை போல. எப்போதும் மகளின் நினைவாகவே இருந்து வந்துள்ளார். மகளின் புகைப்படங்களை துடைத்து வைப்பது, துணிகளை பார்த்து பார்த்து அழுவதுமாக இருந்துள்ளார் காமராஜ். இப்படியான நிலையில்தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் காமராஜ். மனவேதனையில் இருந்த இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகின்றது. இது சித்ராவின் ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதால், விசாரணை முடிவில் தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவாகத் தெரியவரும்.
தற்கொலை தீர்வல்ல.. : மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.


Click it and Unblock the Notifications











