தனது 'குருவின்' குடும்பத்திற்கு உதவதான் மேன் vs வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றாரா நடிகர் ரஜினிகாந்த்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது ஏன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் உலக புகழ் பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். காட்டில் தவிக்கும் இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் இயக்கி தொகுத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் இதுவரை அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருக்கின்றனர். அவர்களை தவிர் ஹாலிவுட் நடிகர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

புலிகள் சரணாலயம்
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் காட்சியாக்கப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் நடிகர் ரஜினிகாந்த் மைசூர் சென்றார். இதன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது.

ரூ.10 லட்சம் செலவு
புலிகள் சரணாலயத்தில் இந்த நிகழ்ச்சியை படப்பிடிப்பு செய்ய வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அங்கு 6 மணி நேரம் மட்டுமே ஷுட்டிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் இரண்டு நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ஷுட்டிங் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த ஒரு நாள் ஷுட்டிகுக்கு மட்டும் 10 லட்சம் ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

முள் குத்தியது
ஷுட்டிங்கின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் தீயாக பரவியது. ஆனால் நேற்று இரவே சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், காயம் எதுவும் ஏற்படவில்லை காலில் சிறிய முள் ஒன்று குத்தி லேசான வலி ஏற்பட்டதாக தெரிவித்தார். தனது அரசியல் பிரவேசத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் வெளியானது.

நிதியுதவி - தகவல்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரும் அவரின் குருவுமான இயக்குநர் பாலச்சந்தரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பணத்தை ரஜினிகாந்த் பாலச்சந்தரின் குடும்பத்திற்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் என்ற பெயர்
ஆனால் இந்த தகவலை நடிகர் ரஜினிகாந்தின் தரப்போ அல்லது மறைந்த இயக்குநர் பாலச்சந்தரின் தரப்பில் இருந்தோ யாரும் உறுதிப்படுத்தவில்லை. 1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் இயக்குநர் பாலச்சந்தர் நடிகர் ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தினார். சிவாஜி ராவ் என்ற பெயருடன் தமிழ் சினிமாவுக்கு வந்த அவருக்கு ரஜினிகாந்த் என்று பெயர் வைத்தது பாலச்சந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











