ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர்.சி.. மனக்கசப்பு காரணம்?.. சமாதான பேச்சுவார்த்தை ஸ்டார்ட்?
சென்னை: ரஜினிகாந்த் படத்திலிருந்து சுந்தர்.சி வெளியேறியது பலருக்கும் ஆச்சரியத்தைத்தான் கொடுத்திருக்கிறது. ரஜினி - கமல் என்ற பிரமாண்ட கூட்டணியிலிருந்து அவர் வெளியே வருகிறார் என்றால் ஏதோ ஒன்று நடந்திருக்க வேண்டும் என்று ஆளாளுக்கு பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இதுகுறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்.
ரஜினியை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவன், இன்னும் பல ஹிட் படங்களை இயக்கிய சுந்தர்.சி; தலைவர் 173 படத்தை இயக்கப்போகிறார் என்ற அறிவிப்பு வந்தவுடன் பலருக்கும் மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது. ஏனெனில் துப்பாக்கி, ரத்தம் போன்றவற்றோடு நடித்து ரஜினியே டயர்டு ஆகியிருப்பார். எனவே ஃபேமிலி ஆடியன்ஸை கவர்வதற்கு ஒரு படம் செய்ய வேண்டுமென்றால் சுந்தர் சரியான சாய்ஸ் என்று கொண்டாடினார்கள்.
கமலும் கூட்டணியில்: அதுமட்டுமின்றி இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஒரே படத்தில் ரஜினி - கமல் - சுந்தர்.சி என சீனியர்கள் இணைந்திருப்பதால்; தாங்கள் கற்றுக்கொண்ட மொத்த வித்தையையும் இப்படத்தில் இறக்குவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்தது. கண்டிப்பாக தரமான வெற்றியை ரஜினிக்கு கொடுத்து சுந்தர்.சி தன்னை நிரூபிப்பார் என்றுதான் திரைத்துறையில் அனைவருமே ஆரூடம் கூறினார்கள்.

விலகிய சுந்தர்.சி: ஆனால் திடீரென நேற்று சுந்தர் வெளியிட்டிருந்த அறிக்கையில், 'இந்தப் படத்திலிருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் விலகுகிறேன். இந்த முடிவை நான் கனத்த இதயத்தோடு எடுக்கிறேன். வாய்ப்பு கொடுத்த ரஜினி - கமலுக்கு நன்றி. அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. சமீபமாக இளம் இயக்குநர்களுடனேயே அதிகம் பணியாற்றுகிறார் ரஜினி.
ஏன் இப்படி செய்தார்?: தற்போது அவரது பார்வை சீனியர் இயக்குநரான சுந்தர் மீது திரும்பியது. அவரை வைத்து படம் இயக்க மற்ற சில சீனியர் இயக்குநர்களும் ஆசைப்பட்டாலும் ரஜினியின் ஆதரவு சுந்தருக்கு இருந்தது. அப்படி இருக்கையில் அவர் ஏன் விலக வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி; தங்களுக்கு தெரிந்ததை சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது ஒருபக்கம் இருக்க படத்திலிருந்து அவர் விலகியதை அடுத்து வேறு சில இயக்குநர்களின் பெயர்கள் அடிபட தொடங்கியிருக்கின்றன.
அந்தணன் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர், "மூக்குத்தி அம்மன் 2 படத்தின் காட்சிகளை ரஜினிக்கு சுந்தர்.சி போட்டு காண்பித்தார். அதன் பிறகுதான் தலைவர் 173 படத்தை சுந்தர்.சி இயக்குவதற்கு ரஜினி ஒத்துக்கொண்டர். ரஜினியும், கமலும் சுந்தருக்கு ஏற்கனவே பழக்கமானவர்கள்தான்.
சமாதான பேச்சுவார்த்தை: சுந்தர்.சி பொதுவாக கலகலப்பான ஆள். அவர் மீது பெரிய சர்ச்சை எல்லாம் எதுவும் இல்லை. அப்படி இருக்கும்போது அவர் ஏன் வெளியேறினார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இதனை அவர் அறிவிக்காமல்கூட இருந்திருக்கலாம். ஏதோ ஒரு இடத்தில் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது. இப்படியே விட்டுவிடமாட்டார்கள். அமர வைத்து பேசுவார்கள். இந்த அறிக்கையை குஷ்பூதான் முதலில் வெளியிட்டார். ஆனால் அது பரவுவதற்குள் டெலிட் செய்துவிட்டார். எனவே இந்த விவகாரத்தில் சுந்தர்.சியிடம் சமாதான பேச்சுவார்த்தை நடப்பதாகத்தானே அர்த்தம்" என்றார்.


Click it and Unblock the Notifications











