லைகாதான் கடைசி பலி ஆடு.. இயக்குநர்களை மதிக்காத நடிகர்களால் கெட்டுப்போகும் தமிழ் சினிமா.. தயாரிப்பாளர்கள் உஷார்
சென்னை: ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட 200 படங்கள் வரை தமிழ் சினிமாவில் ரிலீஸ் ஆகிறது. இதில் மொத்தமாக ஒரு ஆண்டில் வெற்றி அடையும் படங்கள் என்று எடுத்துக் கொண்டால் 10 படங்கள் கூட தேறாது. அதாவது மாதத்திற்கு ஒரு படம் கூட வெற்றி பெறுவதில்லை என்ற மோசமான நிலையில்தான் தமிழ் சினிமா உள்ளது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். வெகு சில படங்களே தமிழ் சினிமா வர்த்தகத்தின் மீது நம்பிக்கை அளிக்கும் வகையில் வெற்றிகளைக் குவித்துள்ளது. ஆனால் அப்படியான வெற்றிகளும் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகே சாத்தியமாகிறது.
தமிழ் சினிமாவின் இந்த மோசமான நிலைக்கு மிக முக்கியமான காரணமே, கதாநாயகர்களின் அதிகப்படியான சம்பளம் மற்றும் கதை திரைக்கதையில் கதாநாயகர்களின் தலையீடு என்று கூறப்படுகிறது. நல்ல கதை, அதற்கு ஏற்ற திரைக்கதை, அதற்கு பொருந்திப் போகும் கதாபாத்திரம் என இவற்றை மட்டுமே நோக்கமாக கொண்டு சினிமாவில் காலடி எடுத்து வைத்த பல நடிகர்களின் நோக்கம் தற்போது வேறு ஒன்றாக மாறி நிற்கிறது, என்றால் அது, சம்பளம். கதையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற கதாபாத்திரத் தன்மையை உணர்ந்து நடித்த நடிகர்கள், இன்றைக்கு, " இந்த காட்சியில் எனது கதாபாத்திரத்தைவிட அந்த கதாபாத்திரம் ரொம்பவும் ஸ்ட்ராங்காக உள்ளதே, டயலாக்குகள் அதிகமாக உள்ளதே, அவற்றை குறையுங்கள், அல்லது காட்சியை மாற்றுங்கள்" என்று இயக்குநருக்கு ஆர்டர் போடும் கதாநாயகர்கள் இருக்கிறார்கள் என்ற பேச்சு இப்போதும் உள்ளது.


அஜித் குமார்: படத்தின் வெற்றிக்கு எப்படி இயக்குநர்கள் பொறுப்பாகிறார்களோ, அதேபோல் தோல்விக்கும் அவர்களே பொறுப்பு. தோல்விக்கு நடிகர்களாகிய எங்களை காரணம் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். மேலும், ஒரு படம் ரசிகர்கள் மத்தியில் ஒர்க்-அவுட் ஆகவில்லை என்றால், அதற்கு காரணம், கதை, மற்றும் திரைக்கதையில் தான் இருக்கும். ஒரு நடிகராக நான் எப்படி ஒரு கதையைக் கேட்டு படத்தில் கமிட் ஆகிறேனோ, அதேபோலத்தான், ஒரு தயாரிப்பாளரும் ஒரு கதையைக் கேட்டு அந்த கதை மீது நம்பிக்கை வைத்து படத்தை தயாரிக்க முன் வருகிறார். ஆனால் படம் தோல்வி அடைந்தால் தயாரிப்பாளர்கள் நடிகர்களாகிய எங்களை காரணம் சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது" என்று பேசியுள்ளார்.
கதை கேட்பது: அஜித் குமாரின் இந்த பழைய பேட்டியில் மிகவும் முக்கியமான விஷயத்தை பேசியுள்ளார் என்று தான் பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தயாரிப்பாளர்களும் அமர்ந்து கதை கேட்டார்கள். அவர்களும் கதையை தேர்வு செய்தார்கள், ரிஜெக்ட் செய்தார்கள். ஆனால், இப்போது பல தயாரிப்பாளர்கள் படத்தின் கதையைக் கேட்பதில்லை. மாறாக ஒரு பெரிய கதாநாயகரின் கால்ஷீட் கிடைக்கிறது என்றாலே, ஓட்டை உடைசல் கதையாக இருந்தாலும் அதை படமாக எடுக்க பல நூறு கோடிகளை செலவு செய்கிறார்கள். அதன் பின்னர், படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாததால், படம் தோல்வி அடைகிறது.
திருப்பூர் சுப்பிரமணியம்: சமீபத்தில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டியில் கூடி மிகவும் முக்கியமான விஷயத்தைச் சொன்னார். அதாவது, " தமிழ் சினிமாவில் தற்போது தயாரிப்பாளர்கள் அமர்ந்து கதை கேட்பதில்லை. தயாரிப்பாளர்கள் எப்போது கதை கேட்பதில் இருந்து விலகினார்களோ, அது தமிழ் சினிமாவின் சீரழிவுக்கு ஒரு காரணம். மிகப்பெரிய நிறுவனமான லைகா நிறுவனம் மிக அதிக பணத்தோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்கள்.

தோல்விக்கு காரணம்: அவர்கள் எந்த அளவுக்கு வந்திருக்க வேண்டியவர்கள். அவர்கள் தயாரித்த படங்கள் அடுத்தடுத்து தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணமே அவர்கள் கதைகள் கேட்காமல், படங்களைத் தயாரிக்க முடிவு எடுத்ததுதான். லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த ஆரம்பத்தில் தயாரித்த படங்கள் வெற்றிகளைக் குவித்தது. ஆனால் அதன் பின்னர், தற்போது அந்த நிறுவனம் தயாரிப்பில் இருந்து வெளியேறும் சூழ்நிலை வந்து விட்டதாக கூறப்படுகிறது" என்று கூறினார்.
லைகா: திருப்பூர் சுப்பிரமணியம் கூறியது, கிட்டத்தட்ட உண்மை என்ற பேச்சுதான் தமிழ் சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. அதாவது, லைகா நிறுவனம் தமிழ் சினிமாவில் இருந்து வெளியேறுகிறது என கூறப்படுகிறது. தற்போது நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் படத்தை தயாரித்து வருகிறது. அதன் பின்னர் லைகா எந்த படத்தையும் தயாரிக்க இன்னும் கமிட் ஆகவில்லை. லைகாவின் இந்த முடிவுக்கு காரணம், அவர்கள் தயாரித்த படங்கள் பெரும்பாலும் பெரிய நடிகர்களின் படங்கள், ஆனால் அவற்றில் பெரும்பான்மையான படங்கள் தோல்விப் படங்களாக மாறியதுதான்.

ஆரோக்கியமான சூழல்: கதாநாயகர்களை நம்பி படம் எடுக்கலாம் என்ற மனநிலையில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு லைகாவின் நிலை ஒர் எச்சரிக்கை மணி. அதேபோல் தயாரிப்பாளர்கள் இயக்குநர்களிடம் முழுக்கதையையும் கேட்க வேண்டும். நடிகர்களே கதையைக் கேட்டு சரி என முடிவெடுத்தாலும், தயாரிப்பாளர்கள் அந்த கதையை மீண்டும் கேட்டு முடிவெடுக்க வேண்டும். அதுதான் தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான சூழலை மீண்டும் உருவாக்கும்.
ஸ்டூடியோ க்ரீன்: தயாரிப்பாளர்கள் கதையை கேட்காமல் முடிவெடுத்துவிட்டு, படம் ஓடவில்லை என்றால், நடிகர்களை காரணம் காட்டுவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழாமல் இல்லை. படத்திற்கான முழு பணத்தையும் செலவு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு அந்த படத்தின் மீது அக்கறை இருத்தல் அவசியம். அக்கறையை விட்டுவிட்டு, நடிகர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது, அவரது முந்தைய படம் இத்தனை கோடிகள் பிசினஸ் செய்தது, இயக்குநர் மீது நம்பிக்கை உள்ளது, அவரது முந்தைய படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது என்ற எண்ணத்தில் படத்தை தயாரிக்க முடிவெடுத்தால் தோல்வி வரும்போது அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். உதாரணத்திற்கு ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் கங்குவா படத்தைச் சொல்லலாம்.

தீர்க்கமான முடிவு: இப்படியான படங்களின் தோல்வி என்பது, அந்த தயாரிப்பு நிறுவனம் சார்ந்தது மட்டும் இல்லை. ஒரு தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறது. இதனால் பெரும்பான்மையான தியேட்டர்கள் அந்த படத்திற்கு ஒதுக்கப்படுகிறது. இதனால் சின்ன படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. இதனால் சின்ன பட்ஜெட்டில் வெளியாகும் படங்கள் குறித்து மக்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது. அப்படி பல படங்கள் கடந்த ஆண்டில் மக்கள் மத்தியில் ரீச் அடைவதற்கு முன்னர் தியேட்டரில் இருந்து வெளியேறின, குறிப்பாக ஜமா, போகுமிடம் வெகுதூரமில்லை போன்றவற்றைக் கூறலாம். தமிழ் சினிமா ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் தீர்க்கமான முடிவுடன் இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











