சினிமாக்காரர்களுக்கு எப்போது 'ஞானம்' வரும்?
சென்னை: புதுமைப் பித்தர்களாக நினைத்துக் கொண்டு படம் எடுப்பதில் மட்டும் ஆர்வம் காட்டும் சினிமாக்காரர்கள், நிஜமாகவே ஒரு புதுமையான விஷயத்தை செயலுக்குக் கொண்டு வந்தால் மட்டும் ஏற்க மனம் வருவதில்லை.

திருட்டு விசிடி பிரச்சினை
சினிமாக்காரர்களிடம் போய் உங்களது தலையாய பிரச்சினை என்ன என்று கேட்டால் ஒரே குரலில் ஒட்டுமொத்தமாக அவர்கள் கூக்குரலிடாத குறையாக சொல்வது திருட்டு விசிடி மற்றும் டிவிடி பிரச்சினையைத்தான். சரி இதை ஒழிக்க என்ன நடவடிக்கை என்று அவர்களிடம் அடுத்த கேள்வியைக் கேட்டால், அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

சினிமாக்காரர்களே ஒழிக்கலாமே
ஆனால் உண்மையில் திருட்டு விசிடி-டிவிடியை ஒழிப்பது என்பது சினிமாக்கார்ரகளின் கையில்தான் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை அல்லது புரிந்து கொள்ள முயல்வதில்லை அல்லது முன்வருவதில்லை.

கமல் என்ன சொல்ல வர்ராருன்னா...!
திருட்டு டிவிடியைத் தடுக்க ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், டிவி சேனல்களிலும் வெளியிட வேண்டும், டிவிடி, இன்டெர்நெட் ஒளிபரப்பு உரிமை தர வேண்டும் என்பது கமல்ஹாசன் நீண்ட நாட்களாகச் சொல்லி வரும் விஷயம். இதை இதுவரை திரையுலகைச் சேர்ந்த யாருமே ஆமோதித்ததும் இல்லை, கருத்துச் சொன்னதும் இல்லை. அதை விட்டு விட்டு எதற்கெடுத்தாலும் அரசையே அண்டி வருவதை ஒரு பாலிசியாகவே வைத்துள்ளனர்.

பிரச்சினை தீருமே!
தியேட்டருக்கு படம் வரும் அதேசமயத்தில் டிவி சேனல்களுக்கும் ரைட்ஸ் கொடுத்து ஒரே நேரத்தில் வெளியிடுவது, டிவிடி, இன்டர்நெட் உரிமைகளையும் ஹோல்சேலாக கொடுத்து விடுவது என்பது நிச்சயம் சினிமாவுக்கு ஆரோக்கியமான விஷயம்தான். இதனால் தயாரிப்பாளர்களுக்கு உரிய தொகை கிடைத்து விடும் என்பதோடு அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக படத்தைப் பார்க்கும் வாய்ப்பும் அமைவதால், திருட்டு விசிடி, டிவிடிகளுக்கு வேலையில்லாமல் போகும் என்பதும் உள்ளடங்கியுள்ளது.

கமலை ஏற்க மனசில்லையோ?
கமல்ஹாசன், தான் இதுவரை சொல்லி மட்டுமே வந்த விஷயத்தை தற்போது தனது விஸ்வரூபம் மூலம் கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது. ஆனால் அதை ஏற்க சினிமாக்காரர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் மனசில்லை என்று தெரிகிறது.

'ரிஸ்க்' எடுக்கத் துணிந்த கமல்
புதிய விஷயம் எப்போதுமே ஆரம்ப கட்ட சிக்கல்களையும், சிரமத்தையும் கொடுக்கத்தான் செய்யும். ஆனால் அதுவே ஒரு வெற்றியைப் பெற்று விட்டால் அதைக் கொண்டாடத் தொடங்கி விடலாம். கமல்ஹாசன் கிட்டத்தட்ட தனது மிகப் பெரிய படத்தையே அடகு வைத்து, பெரும் ரிஸ்க் எடுத்து களத்தில் இறக்கத் தயாராக இருக்கும்போது அதை வேடிக்கை பார்க்கக் கூட இவர்கள் தயாராக இல்லை என்பது போலவே எண்ணத் தோன்றுகிறது.

தைரியம் இல்லையே!
நிச்சயம் கமல்ஹாசனைத் தவிர வேறு யாருக்குமே இந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கும் துணிச்சல் வராது என்பது ஒருபுறம் இருக்க அவர் செய்யப் போகும் முயற்சி எப்படி இருக்கும் என்பதைக் கூட உட்கார்ந்து கவனிக்க தைரியம் இல்லை என்பதை ஆச்சரியம்தான்.

டிவியையும் கமல்தான் பாராட்டினார்
இதே கமல்ஹாசன்தான் டிவியால் சினிமாவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்றார். அது உண்மையாகவும் உள்ளது. டிவி வந்ததால் சினிமாக்காரர்களுக்குத்தான் நிறைய லாபம் கிடைத்துள்ளது. அபரிமிதமான விளம்பரங்களையும், 'பில்டப்'களையும் செய்ய இன்று டிவியை விட்டால் வேறு மீடியாவே இல்லை. மேலும் ஓடாத குப்பைப் படங்களையும் கூட உச்சாணிக்குக் கொண்டு போய் விளம்பரம் செய்து ஓட வைக்க இன்று டிவிதான் சினிமாக்காரர்களுக்குப் பெருமளவில் உதவுகிறது.

'இன்டர்காம்' தயாரிப்பாளர்கள்!
கமல்ஹாசன் செய்யப் போகும் முயற்சியை சற்று விட்டுத்தான் பார்ப்போமே... துணிச்சலா சப்போர்ட் பண்ணுங்க சினி்மாக்காரர்களே... அது சரி 'இன்டர்நெட்' என்பதையே 'இன்டர்காம்' என்று சொல்லும் தயாரிப்பாளர்கள் பலரும் இருக்கும்போது கமல்ஹாசனை ஏற்க எப்படி இவர்களுக்கு மனம் வரும்...!


Click it and Unblock the Notifications











