வெற்றி மாறன் மகிழ்ச்சியா இருக்க காரணமே சிம்புதான்.. காரணத்தைச் சொல்லி காலரைத் தூக்கிவிடும் ரசிகர்கள்
சென்னை: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அரசன்' திரைப்படம் தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், அனிருத் இசையமைக்கும் இந்தப் படம், சிம்பு - வெற்றிமாறன் - அனிருத் ஆகிய மூவரும் முதல் முறையாக இணையும் கூட்டணி என்பதால் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. படத்தின் டைட்டில் அறிவிப்பும், வெளியான புரோமோவும் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகும் தகவல்களும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
அரசன் படத்தின் முக்கிய கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்துள்ளது. வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்திற்காக பகல், இரவு பாராமல் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகும் வீடியோக்களில் இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மகிழ்ச்சியாகவும், சிரித்தபடியும் காணப்படுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வெற்றிமாறன் என்றாலே படப்பிடிப்பு தளத்தில் மிகவும் தீவிரமாக இருப்பவர் என்ற பெயர் உண்டு. ஒரு காட்சி முழுமையாக திருப்தி அளிக்கும் வரை விடாமல் உழைப்பார். இதற்கு முன் அவரது படங்களின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களில் கூட அவர் பெரும்பாலும் தீவிரமாகவே காணப்பட்டுள்ளார். ஆனால், அரசன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் அவர் மிகவும் ஜாலியாகவும், ரிலாக்ஸாகவும் இருப்பதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சிம்புதான் காரணம்: இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணனும் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து பலரது கவனத்தை ஈர்த்தது, வெற்றிமாறனுடன் ஏற்கனவே பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட பலரிடம் பேசியபோது, "இவ்வளவு சந்தோஷமாக வெற்றிமாறனை இதற்கு முன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்ததே இல்லை" என்று அவர்கள் கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு முக்கிய காரணம் சிம்புவின் அணுகுமுறையே என்றும் கூறப்படுகிறது. இயக்குநர் என்ன நினைக்கிறார், காட்சியின் உணர்வு என்ன, அதற்கு முந்தைய காட்சி என்ன, அடுத்த காட்சி என்ன என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்ற நடிப்பை ஒரே டேக்கிலேயே பெரும்பாலும் கொடுத்து விடுகிறாராம் சிம்பு. அதனால் தேவையற்ற தாமதங்கள் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்மாசனம்: படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவும் சமீபத்தில் சிம்புவின் உழைப்பை வெளிப்படையாகப் பாராட்டியிருந்தார். "சிம்பு ஒரு சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். தனது அர்ப்பணிப்பாலும் நடிப்பாலும் வெற்றிமாறனின் மனதில் தனக்கென ஒரு சிம்மாசனத்தைப் போட்டு அமர்ந்துவிட்டார்" என்று அவர் கூறியிருப்பதும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோக்கள் மற்றும் கருத்துகளை ஒன்றாக இணைத்து, சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். "தலைவனோட திறமை இப்போதான் எல்லாருக்கும் புரிய ஆரம்பிச்சிருக்கு", "சரியான இயக்குநர் கிடைத்தா சிம்புவிடம் இருந்து என்ன மாதிரியான நடிப்பு வரும் என்பதை அரசன் நிரூபிக்கும்", "வெற்றிமாறன் மாதிரி இயக்குநரையே இவ்வளவு ரிலாக்ஸா வைத்திருக்கிறார் என்றால் அதுவே சிம்புவின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு" என்று காலரைத் தூக்கிவிட்டு பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications