Rajini X Vijay: ரஜினிகாந்துக்கு வாழ்த்து சொல்லாத விஜய்.. எல்லாம் கரூர் சம்பவம் தான் காரணமா?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று அதாவது டிசம்பர் 12ஆம் தேதி தனது 75 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தொடங்கி, கமல்ஹாசன், வைரமுத்து, உள்ளிட்ட திரைப் பிரபலங்கள், சன் பிக்சர்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனங்களும், ரசிகர்களும் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால் நடிகர் விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளில் காலை 10 மணிக்கு அவரது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவரது வாழ்த்துக் குறிப்பில், " பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று வாழ்த்தி இருந்தார். ஆனால் இந்த ஆண்டு அவர் வாழ்த்தவில்லை.

விஜய் வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கரூர் துயரச் சம்பவத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது தான் என்றும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது. அதாவது, " கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என்று பதிவிட்டுருந்தார்.
கரூர் சம்பவம்: அவரது இந்த பதிவு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் இருந்தது. அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆளும் திமுக அரசுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார். இந்த காரணமாகத்தான் ரஜினிக்கு விஜய் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ரஜினி ரசிகர்: ஆனால் விஜய் தனது ஆரம்ப காலங்களில் அவரது திரைவாழ்க்கையில் ரஜினியை தனது ரோல் மாடலாகவே கருதி வந்தார். விஜய் தனது படங்களிலேயே தன்னை ரஜினியின் ரசிகராக காட்டிக் கொண்டுள்ளார். குறிப்பாக அண்ணாமலை தம்பி இங்க ஆட வந்தேன்டா பாடலை தனது படத்தில் இடம் பெறச் செய்தார். அதேபோல், படையப்பா படத்தில் ரஜினியுடன் நடிக்க முயற்சி எடுத்ததை அவரே மேடை ஒன்றில் தெரிவித்திருந்தார்.

அரசியல் காரணங்களா?: இப்படி இருக்கும்போது நடிகர் விஜய் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் மறைமுகமாக அரசியல் பேசி வந்தார். அதில் அப்பா சட்டையை மகன் தனக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தனது அப்பா சட்டை என்பதற்காக மகன் அணிந்து கொள்வது முறையாகாது என்று அவர் பேசியது திமுகவைத்தான் என்று பலரும் கருதினார்கள். இது மட்டும் இல்லாமல் காக்கா - கழுகு கதை போன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்தது. அவற்றை எல்லாம் கடந்தும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த விஜய், இம்முறை ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காததற்கு காரணம் கரூர் துயரச் சம்ப்வத்திற்கு ரஜினியின் ரியாக்ஷன் தான் என்று பேச்சுக்கள் அடிபடுகிறது.


Click it and Unblock the Notifications











