ரூ 20 கோடி சிக்கலில் பாகுபலி 2.... திட்டமிட்டபடி தமிழகத்தில் வெளியாகுமா?
(பாகுபலி 2 ரிலீஸ் சிக்கல் தொடர்பாக நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...)
தயாரிப்பாளர் நேரடியாக விநியோகஸ்தரிடம் குறைந்தபட்ச லாப நோக்கோடு வியாபாரம் செய்த காலங்களில் பிரச்சினைகள் இன்றி படங்கள் ரீலீஸ் ஆகின.
தமிழ் சினிமா தயாரிப்பு துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள், கந்து வட்டி கும்பல் ஆதிக்கம் தொடங்கியவுடன் நாணயமான தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் சினிமா தொழில் விட்டு விலகிப் போனார்கள்.
அதன் பின் இங்கு பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாமே பல கட்ட பஞ்சாயத்துகளுக்கு பின்னரே ரீலீஸ் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிப் போனது. முதல் போட்டு திரைப்பட விநியோக துறையில் தொழில் செய்யாத நபர்கள் பஞ்சாயத்துகளில் நடுவர்களாக அமரும் போக்கு சமீப காலங்களாக அதிகரித்து விட்டன. இவர்களே சம்பந்தபட்ட படங்களுக்கு பைனான்ஸ் வாங்கிக் கொடுத்தவர்களாக அல்லது கொடுத்தவர்களாக இருக்கின்றனர். இதனால் நியாயங்களுக்குப் புறம்பாக பைனான்சியர்கள் நலன் சார்ந்து அவர்களது வட்டி, அசல் வசூலிக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படுவதால் பெரும்பாலான படங்கள் நஷ்டத்தை சந்திக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது.

இது போன்ற சிக்கல் பாகுபலி 2 படத்திற்கும் ஏற்பட்டுள்ளது. 2015 ல்பாகுபலி முதல் பாகம் ரூ 13.50 கோடிக்கு தமிழக உரிமை வாங்கப்பட்டது. 35 கோடி வருமானம் கிடைத்தது. பாகுபலி 2 தமிழ்நாடு தியேட்டர் ரீலீஸ் உரிமை 36 கோடிக்கு வாங்கப்படுகிறது. இவரிடமிருந்து ஆஸ்கார் பிலிம்ஸ் ரூ 37 கோடிக்கு வாங்குகிறார். பேசிய அடிப்படையில் இரண்டாவது தவணை பணம் செலுத்தத் தாமதமாகிறது. பேசித் தீர்க்க வேண்டிய இப்பிரச்சினையை பேசாமல் வேறு ஒருவருக்கு படத்தை 47 கோடிக்கு மாற்றித் தருகிறார் கலைராஜன்.
ஆஸ்கார் பிலிம்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்யலாபத்தில் 2 கோடி தரப்படுகிறது. 47 கோடிக்கு வாங்கிய கிரீன் புரொடக்க்ஷன் சரவணன் அனைத்து ஏரியாக்களையும் வியாபாரம் முடிக்கிறார். சுமார் 2 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. இப்போது படம் டெலிவரி எடுக்க கலை ராஜனுக்கு பணம் செலுத்த சரவணன் தன்னிடம் பணம் இல்லை என்கிறார். தமிழ்நாடு உரிமையை வாங்குவதற்கு அட்வான்ஸ் கொடுக்க இவர் வாங்கிய கடன் 20 கோடி. இவர் ஏற்கெனவே ரீலீஸ் செய்த தங்க மகன், பைரவா, போகன், கட்டப்பாவ காணோம் படங்களுக்கு விநியோகஸ்தர்களிடம் வாங்கிய அட்வான்ஸில் நிலுவைத் தொகைக்கு பாகுபலி 2 படத்தின் வியாபார பணம் கழிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட டங்கள் எதுவும் சரவணன் நேரடியாக தயாரித்த படம் ஒன்று கூட இல்லை. லாபகரமாக வியாபாரம் செய்யப்பட்ட பாகுபலி, டெபிசிட் காரணமாக ரீலீஸ் ஆகுமா ஆகாதா என்ற தவிப்பில் இயக்குநர் ராஜமெளலி, கலைராஜன், பணம் கொடுத்த ஏரியா விநியோகஸ்தர்கள் ஆகியோர் உச்சகட்ட பதட்டத்தில் பரிதவிக்கின்றனர்.
நிலங்களை வடிவமைத்து தரும் கிரீன் பேஸ் தொழிலில் கொடி கட்டிப் பறந்த கௌரவத்துக்கு சொந்தக்காரர் சரவணன் பைனான்சியர்களிடம். கை கட்டி தலைகுனிந்து நிற்கிறார். ஆற அமர பஞ்சாயத்து பேச இன்று கூடுகிறது, விநியோக தொழிலே செய்யாத விநியோகஸ்தர்கள் ஆதிக்கம் செலுத்தும், தமிழ்நாடு விநியோகஸ்தர் கூட்டமைப்பு.
உலகம் முழுவதும் ரீலீஸ் ஆன விஸ்வரூபம் தமிழ்நாட்டில் ரீலீஸ் ஆகவில்லை. பக்கத்து மாநிலத்தில் சென்று பார்த்தார்கள். பாகுபலிக்கு அது போன்ற சிக்கல் இல்லை. 22 கோடி டெபிசிட் அத இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் - இந்த மாதிரியான நெருக்கடி வர யார் காரணம்? நாட்டாமைகள் தீர்ப்பு என்னவாக இருக்கும்?
க்ளைமாக்ஸ் நாளை...
-ஏகலைவன்


Click it and Unblock the Notifications











