Exclusive: 'நிஜத்தில் நான் அவமானப்பட்டதில்லை'... உண்மையை சொன்ன பரியனின் தந்தை தங்கராஜ்!
சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக பரியேறும் பெருமாள் நடிகர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: சினிமாவில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுவதாக பரியேறும் பெருமாள் படத்தில் கதிரின் அப்பாவாக நடித்த நடிகர் தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்தப்படம் பரியேறும் பெருமாள். மாற்று விமர்சனமே வராமல், அனைவராலும் ஒருமனதாக பாராட்டப்பட்ட படம் அது. அந்த படத்தில் பரியனின் தந்தையாக வந்து அவமானப்பட்டு, நம் கண்களில் கண்ணீர் வரவழைத்தவர் கிராமிய நடன கலைஞர் தங்கராஜ்.
பெண் வேடமிட்டு ஆடும் ஆண்கள் படும் அவமானங்களை நம் கண்முன்னே கொண்டு வந்த தங்கராஜை சந்தித்தேன். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து.....

வெள்ளரி வியாபாரம்
"திருநெல்வேலி தான் என் சொந்த ஊர். பாளையங்கோட்டை மார்க்கெட்ல வெள்ளரிக்காய் வியாபாரம் செய்றேன். ரெண்டு வருசத்துக்கு முன்பு வர சலங்க கட்டி பெண் வேடமிட்டு ஆடினேன். வயசாகிட்டதால நிறுத்திட்டேன். விவசாயமும் நல்லா போய்ட்டு இருக்கு.

முதலில் தயங்கினேன்
சினிமாவுல நடிக்கனும்னு மாரி செல்வராஜ் முதல்ல சொன்னப்ப எனக்கு தயக்கமா இருந்தது. அப்புறம் வீட்டுல பேசிட்டு சரின்னு சொல்லிட்டேன். முதல்ல கேமரா முன்னாடி நிற்க பயமா இருந்தது. அப்புறம் சரியாகிடுச்சு.

பாராட்டுறாங்க
இப்ப எனக்கு எல்லா பக்கமுமே நல்ல பேரு கிடைச்சிருக்கு. நல்லா மதிக்கிறாங்க. நான் நடிக்க போனது ஊருக்குள்ள யாருக்கும் தெரியாது. இப்போ படம் ரிலீசாகிட்டதால, எங்ககிட்ட ஏன் சொல்லலைன்னு கோவிச்சிக்கிட்டாங்க. சூப்பராக நடிச்சிருக்கேன்னு பாராட்டுறாங்க.

நிஜத்தில் அவமானப்பட்டதில்லை
படத்துல வருவது போல் நிஜத்தில் நான் அவமானப்பட்டது கிடையாது. நான் உண்டு என் வேலை உண்டு என்று இருப்பேன். மாரி செல்ராஜ் சொன்னதை கேட்டு தான் நான் அப்படி நடித்தேன்.

தொடர்ந்து நடிப்பேன்
இந்த படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்திருக்கிறது. இனி தொடர்ந்து நடிக்கலாம் என உற்சாகமாக இருக்கிறேன். நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பேன்," என சொல்லும் தங்கராஜின் முகத்தில் சந்தோஷம் தாண்டவமாடுகிறது. மகிழ்ச்சி.


Click it and Unblock the Notifications











